ஐதராபாத்தில் வெள்ளை வேட்டி சட்டையுடன் மேடையில் நீண்ட வரிசையில் நின்றபடி அமைச்சர்கள் கோழிக்கறி சாப்பிட்டனர்.
முட்டை மற்றும் கோழிக்கறி சாப்பிடுவதால் கொரோனா பரவுகிறது என்ற வதந்தியை போக்குவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில்,தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமாராவ், அவரது சகாக்களான எடெல்லா ராஜேந்தர், தாலசானி சீனிவாஸ் யாதவ் மற்றும் பலருடன் கோழிக்கறி சாப்பிட்டார்.
சுவாச மண்டலத்தைப் பாதிக்கும் கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலாகச் சீனாவின் வுஹானில் உள்ள கடல் உணவு சந்தையிலிருந்து பரவ தொடங்கியதாகத் தகவல்கள் வெளியானது. இதையடுத்து, இது மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்த விலங்கிலிருந்து வந்திருக்கலாம் என வதந்திகள் பரவியது.
எனினும் ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கான சரியான காரணத்தைக் கண்டறிய முயன்று வருகின்றனர்.
இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பு பல நாடுகளுக்குப் பரவியுள்ளது, சமீபத்தில் அமெரிக்காவுக்கும் பரவியது. அங்கு மூன்றாவதாக ஒருவருக்குப் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
அந்த நபர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யாதவர் என்றும் நோய்வாய்ப்பட்ட எவருடனும் தொடர்பு கொள்ளாத ஒருவரும் என்றும் தெரியவந்துள்ளதாகவும், இது நாட்டில் நோய் பரவி வருவதைக் குறிக்கிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சீனாவிலிருந்து வந்த இந்தியர்களின் குழுக்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒரு சிலர் சில வாரங்கள் கண்காணிப்பிலிருந்த பின்னர் விடுவிக்கப்பட்டனர்.