This Article is From Feb 04, 2019

சபரிமலையில் 2 பெண்கள் மட்டுமே தரிசனம் செய்துள்ளனர்! - கேரள அமைச்சர் தகவல்!

இதுவரை 51 பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது.

50 வயதிற்கு உட்பட்ட 7,564 பெண்கள் சபரிமலை தரிசனத்திறகாக ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்

Thiruvananthapuram:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 2 பேர் மட்டுமே தரிசனம் செய்துள்ளதாக கேரள அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்யலாம் என்ற உச்சீநிதமன்ற தீர்ப்பை தொடர்ந்து, இதுவரை 51 பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது.

இதுகுறித்த வழக்கில் கேரள அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஹான்சாரியா, இதுவரை 51 பெண்கள் கோவிலுக்குள் சென்றுள்ளனர் என்ற தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தார். 16 லட்சம் பக்தர்கள் சபரிமலை செல்வதற்கு ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.

இதில் 7,500 பேர் 10 - 50 வயதிலான பெண்கள் என்றும் இதில் ஆன்லைனில் பதிவு செய்யாமல் நேரடியாக சென்றவர்கள் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 16ஆம் தேதி முதல் தற்போது வரை 44 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

50 வயதிற்கு உட்பட்ட 7,564 பெண்கள் சபரிமலை தரிசனத்திறகாக ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர் என்பதை அவர்களின் ஆதார் விவரம் மூலம் உறுதியாக தெரிவிக்கிறோம். இதில் 51 பெண்கள் இதுவரை சபரிமலையில் தரிசனம் மேற்கொண்டுள்ளனர். எங்களிடம் சபரிமலை வரும் பக்தர்களின் வயதை தெரிந்து கொள்வதற்கு வேறு எந்த வழியும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் பட்டியல் போலியானது என்று செய்தி வெளியானது.

இந்நிலையில், 2 பெண்கள் மட்டுமே தரிசனம் செய்துள்ளதாக கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார். கேரள சட்டப்பேரவையில் நேற்று காங்கிரஸ் எம்எல்ஏ.க் களின் கேள்விக்கு பதிலளித்த தேவசம் அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், சபரிமலை கோயில் செயல் அதிகாரி தகவலின்படி, 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 2 பேர் மட்டுமே கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் என்றார்.
 

.