தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட அதே இடத்தில் குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த நவ.27ம் தேதியன்று ஐதராபாத் சுங்கச்சாவடி அருகே அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 4 பேரால் எரித்துகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, மறுதினம் எரிந்த நிலையில் போலீசாரால் அந்த பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, இரண்டு நாட்களில் குற்றவாளிகள் முகமது (26), ஜோலு சிவா (20), ஜோலு நவீன் (20) மற்றும் சிந்தகுன்டா சேனகேவலு (20) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட அதேபகுதியில் நடித்துக்காட்டும் படி அவர்கள் 4 பேரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்துச்சென்றுள்ளனர்.
அப்போது, அதில் ஒருவர் தப்பித்துச்செல்ல மற்றவர்களுக்கு கண்காட்டியதாகவும், உடனடியாக அவர்கள் 4 பேரும் போலீசாரை தாக்கிவிட்டு அவர்களின் ஆயுதங்களை எடுத்து தப்பிச்செல்ல முயன்றதாகவும் அதனால், போலீசார் அவர்களை சுட்டுக்கொன்றதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக கால்நடை பெண் மருத்துவரின் தந்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், எனது மகள் இறந்த 10 நாட்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்காக காவல்துறை மற்றும் அரசுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மகளின் ஆத்மா இப்போது சாந்தியடையும் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 2012ல் டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயாவின் தாய் ஆஷா தேவி தெலுங்கானா சம்பவம் குறித்து கூறும்போது, குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக நான் போலீசாருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். போலீசார் மிக நல்ல பணியை மேற்கொண்டுள்ளனர்.
4 பேரையும் என்கவுண்டர் செய்த போலீஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு காவல்துறையினர் மீது பயம் வர வேண்டும். இன்றைய நாளில் குற்றவாளிகளுக்கு இதுபோன்ற தண்டனை அவசியப்படுகிறது.
நான் 7 வருடங்களாக காத்திருக்கிறேன். ஒவ்வொரு நீதிமன்றமாக அழைந்துவருகிறேன். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுகிறேன். ஆனால், நீதிமன்றமோ, அவர்களுக்கு மனித உரிமை உண்டு தூக்கிலிட முடியாது என்கிறது. ஆனால், இன்றைய தினம் இவை அவசியப்படுகிறது. எனது மகள் கொலைக்கு காரணமானவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தெலுங்கானா காவல் துறையின் இந்த நடவடிக்கையை மேலும் பலர் வரவேற்றுள்ளனர். அதில், நடிகர் ரிஷி கபூர் தனது ட்வீட்டர் கருத்தில் தெலுங்கானா காவல்துறைக்கு எனது பாராட்டுகள்.. என்று தெரிவித்துள்ளார். இதேபோல், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், ஐதராபாத் காவல்துறை சிறந்த பணியை மேற்கொண்டிருப்பதாகவும், போலீசாருக்கு தமது வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.
எனினும், இந்த என்கவுன்டர் சம்பவத்திற்கு எதிர்ப்பு மனநிலையும் காணப்பட்டு வருகிறது. அந்தவகையில், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது ட்வீட்டர் பதிவில், பலாத்காரம் ஒரு கொடூரமான குற்றம். அது சட்டத்தின் படி கடுமையாக தடுக்கப்பட வேண்டும்.
இதில் குற்றவாளிகளின் மோசமான செயல் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால் என்கவுன்டரில் கொல்வது என்பது நமது அரசியலமைப்பிற்கு ஒரு கறை. இது குற்றத்திற்கு கொடுக்கப்படும் உடனடி நீதி என்பதாக புரிந்து கொள்ள முடிந்தாலும், இது சரியான வழி அல்ல என தெரிவித்துள்ளார்.
இந்த என்கவுன்டருக்கு எதிர்வினை கருத்து தெரிவித்த மூத்த வழக்கறிஞர் பிருந்தா குரோவர், "இது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்கிறார். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
பெண்கள் சமமான மற்றும் சுதந்திரமான குடிமக்களாக வாழ்வதை உறுதிசெய்கிறோம் என்ற பெயரில் நாளை அனைத்து மாநில அரசும் இதனை செய்யும். என்வுன்டர் செய்த போலீசார் மீது முதற்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும், இந்த என்கவுனடர் தொடர்பாக தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்திட வேண்டும்.
எந்த விசாரணையும் இல்லாமல், வழக்குத் தொடரவும் இல்லாமல் இருந்தால், இந்த கொலைகள் பொதுமக்களை திசைதிருப்பி காவல்துறையையும் அரசையும் எந்தவொரு பொறுப்புக்கூறலிலிருந்தும் காப்பாற்றி விடும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், பெண்களின் பெயரில் காவல்துறையினர் எந்த என்கவுனடரும் செய்யக்கூடாது என்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு பாஜகவின் மேனகா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறும்போது, இந்த சம்பவம் நாட்டிறகு ஒரு பயங்கரமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. எது நடந்ததோ அது நாட்டிற்கு ஆபத்தானது. நீங்கள் விரும்புவதால் மக்களை கொல்ல முடியாது. சட்டத்தை உங்கள் கைகளில் எடுக்க முடியாது. அவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்ட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.