This Article is From Mar 04, 2020

முதல்வரின் சிறப்பான செயல்பாட்டால் விக்கெட் இழக்கும் எதிர்க்கட்சியினர்: செல்லூர் ராஜூ

சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு உறுதுணையாக இருக்கும். இஸ்லாமிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பயப்பட வேண்டாம். யார் இணைந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை.

முதல்வரின் சிறப்பான செயல்பாட்டால் விக்கெட் இழக்கும் எதிர்க்கட்சியினர்: செல்லூர் ராஜூ

ரஜினிகாந்த் முதலில் கட்சி தொடங்கட்டும் - செல்லூர் ராஜூ

ஹைலைட்ஸ்

  • முதல்வரின் சிறப்பான செயல்பாட்டால் விக்கெட் இழக்கும் எதிர்க்கட்சியினர்.
  • வேறு யார் சொல்வதை குறித்தும் சிந்திப்பது இல்லை.
  • திமுகதான் எங்களுடைய முக்கியமான எதிர்க்கட்சி

முதல்வரின் சிறப்பான செயல்பாட்டால் எதிர்க்கட்சியினர் விக்கெட்டுகளை இழந்து கொண்டிருக்கின்றனர் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு உறுதுணையாக இருக்கும். இஸ்லாமிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பயப்பட வேண்டாம். யார் இணைந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை.

ரஜினிகாந்த் முதலில் கட்சி தொடங்கட்டும். அவர்கள் கொள்கையை மக்களிடம் கொண்டு செல்லட்டும். கூட்டணி குறித்துத் தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

அப்போது, சிஏ.ஏ.வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும் என ஹெச்.ராஜா பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், அப்படியொரு கருத்தினை ஹெச்.ராஜா சொல்லி இருக்கிறாரா என்பது தெரியவில்லை.

நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும். ஸ்டாலினை காட்டிலும் எங்களுக்குப் பெரிய தலைவர் யாரும் கிடையாது. அவர்தான் இன்று எதிர்க்கட்சி தலைவர். திமுகதான் எங்களுடைய முக்கியமான எதிர்க்கட்சி. வேறு யார் சொல்வதைக் குறித்தும் சிந்திப்பது இல்லை.

மக்கள்தான் எல்லோருக்கும் எஜமானர்கள். இவங்க என்ன கலைக்க வேண்டும் எனச் சொல்வது? இதென்ன கருக்கலைப்பா?. தமிழக முதலமைச்சரின் சிறப்பான செயல்பாட்டால் தொடர்ந்து விக்கெட் எடுத்துக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சியினர் விக்கெட்டை இழந்து கொண்டே இருக்கிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினாலேயே தாங்க முடியவில்லை என்றால் மற்றவர்கள் எம்மாத்திரம். ஆட்சியைக் கலைக்க வேண்டும் என ஸ்டாலின் முன்பு சொல்லிக்கொண்டிருந்தார். தற்போது சொல்வதில்லை என்று அவர் கூறினார்.

.