250க்கும் அதிகமான தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஹைலைட்ஸ்
- உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
- அகமதாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசினார்.
- தாக்குதல் விவரங்களை தெரிவிக்குமாறு எதிர்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
New Delhi: புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, கடந்த மாதம் 26-ம் தேதி, பாகிஸ்தானின் பாலகோட் மலைஉச்சியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது, இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் எத்தனை தீவிரவாதிகள் உயிரிழந்தனர் என்பது குறித்த தகவல்களை இன்னும் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, எனினும், குஜராத் மாநிலத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, இந்திய விமானப்படையினர் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
பாலக்கோட் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் பல கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி வந்த நிலையில், பாஜக தலைவர் அமித்ஷா முதல் முறையாக தாக்குதல் குறித்து தகவல் அளித்துள்ளார்.
உரி தாக்குதல் நடந்த போதும், நமது படைகள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த பின் நமது படைகள் பதில் தாக்குதல் நடத்தாது என்று நினைத்தனர். ஆனால், தாக்குதல் நிகழ்ந்த 13 நாட்களுக்குள் இந்திய விமானப்படை பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 250 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான் மீதான இந்திய விமானப்படையின் தாக்குதலை அரசியலாக்கவில்லை என பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், ஆயுதப் படைகள் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த நாடுகளில் அமெரிக்க, இஸ்ரேலை தொடர்ந்து இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதேபோல், பாகிஸ்தான் f-16 ரக விமானத்தை தாக்கிய விமானப்படை வீரர் பாகிஸ்தான் பிடியில் சிக்கினார். ஆனால், சிறைவைக்கப்பட்ட அவர் 24 மணி நேரத்தில் மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கு நரேந்திர மோடியின் உறுதியாலே இது நிகழ்ந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
![mqjutihc]()
பாலக்கோட் விமானப்படை தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க எதிர்கட்சியினரான ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அமித்ஷா, இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும். இவர்களின் கருத்துகளால் பாகிஸ்தான் மகிழ்ச்சி பெறுகிறது. அவர்கள் ஆயுதப்படைகளுக்கு துணையாக இல்லை என்றாலும் அமைதி காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை குறித்து அரசு மற்றும் ராணுவ தரப்பில் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை வெளியிடப்படாத நிலையில் முதன் முறையாக ஆளும் பா.ஜ.க.வின் தேசியத் தலைவரான அமித்ஷா 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 26ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமா னப் படை சரமாரியாகக் குண்டுகளை வீசியது. இந்தத் தாக்குதலில் பயங்கவாத முகாமில் இருந்த சுமார் 300-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதலை உறுதிப்படுத்திய ஜெய்ஷ் இ முகமது அமைப்பு, இதில் யாரும் பலியாகவில்லை என்று மறுத்திருந்தது.