ப.சிதம்பரத்தை வரும் 26ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் தர மறுத்ததை தொடர்ந்து, நேற்றிரவு சிபிஐ அதிகாரிகள், ப.சிதம்பரத்தின் வீட்டின் சுவர் ஏறி குதித்து அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, இன்று காலை ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். சுமார் மூன்று மணி நேரம் நடந்தது.
இந்த விசாரணையை அடுத்து, சிபிஐ அதிகாரிகள் பிற்பகலில் ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் சிதம்பரத்தை ஆஜர்படுத்தினர். அப்போது ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சிபிஐ நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தது. மேலும் ப.சிதம்பரத்திற்கு எதிராக ஜாமினில் வெளியே வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் வழக்கு குறித்து சிபிஐ தரப்பில் எழுப்பப்பட்ட எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை எனவும் சிபிஐ தரப்பு வாதாடியது. அதனால் ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என சிபிஐ கோரியுள்ளது.
இதனிடையே, ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கில் ஏற்கெனவே விசாரணை முடிவுற்ற நிலையில் தற்போது காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் சம்மன் அளிக்கப்பட்டபோதெல்லாம் சிபிஐ, அமலாக்கத்துறையினரிடம் சிதம்பரம் ஆஜரானார் எனவும் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்விகளையே மீண்டும் கேட்டுள்ளனர் எனவும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரசின் 6 செயலாளர்கள் கைது செய்யப்படவில்லை எனவும் ப.சிதம்பரம் தரப்பு வாதாடியது.
இருதரப்புக்கும் இடையே நடந்த காரசார விவாதத்தை தொடர்ந்து, நீதிபதிகள் வழக்கை அரை மணி நேரம் ஒத்திவைத்தனர். தொடர்ந்து, சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா, காவலில் வைக்கப்படுவாரா என்று எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், ப.சிதம்பரத்தை வரும் 26ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தினமும் அரை மணி நேரம் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இன்று இரவு முதல் ப.சிதம்பரத்திடம் விசாரணை தொடங்குகிறது என சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. வரும் திங்கள்கிழமை வரை அவரிடம் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.