Read in English
This Article is From Aug 21, 2019

ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ தீவிரம்: 2 மணி நேரத்தில் நேரில் ஆஜராக நோட்டீஸ்!

கபில் சிபில் தலைமையிலான ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர் குழு, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இரண்டு மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சிபிஐ அதிகாரிகள் நள்ளிரவில் சிதம்பரம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக செயபல்பட்டதாகவும் ப.சிதம்பரம் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும், முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிஐ-யும் வழக்குப்பதிவு செய்தன. 

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பெயரும் சேர்க்கப்பட்டது. 2018-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து அமலாக்கத்துறை அவருடைய சொத்துகளை முடக்கியது.

இதுதொடர்பாக சிபிஐ ஒரு குற்ற வழக்கும், சட்டவிரோத பண பரிமாற்ற பிரச்சனையில் அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் ஒரு வழக்கும் தொடுத்து அவை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

Advertisement

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில், சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும் நீதிபதி சுனில்கவுர் தன்னுடைய தீர்ப்பில் கூறும்போது, இந்த விவகாரத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் அனைத்துக்கும் மனுதாரர் தலைமையேற்று இருக்கிறார். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் முன்ஜாமீன் வழங்குவதற்கான நியாயத்தை எடுத்துக்கூறவில்லை. 

Advertisement

பொருளாதாரம் சார்ந்த குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அணுகவேண்டும். இதுபோன்ற பெரிய அளவிலான பொருளாதார குற்றங்களில் விசாரணை அமைப்புகளின் கரங்களை கட்டிவைக்க முடியாது.

மனுதாரர் முன்னாள் நிதி அமைச்சராக இருந்திருக்கிறார் என்பதையும், அந்நேரத்தில் அவர் ஐஎன்எக்ஸ். மீடியா குழுமத்துக்கு ரூ.305 கோடி அளவில் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார் என்பதையும் மறுக்க முடியாது. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பதால் மட்டுமே அவருடைய முன்ஜாமீன் கோரிக்கையை நியாயப்படுத்த முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையடுத்து, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கபில் சிபில் தலைமையிலான ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர் குழு, உச்சநீதிமன்றத்தல் இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. 

இதனிடையே, டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டுக்குள் நேற்று மாலை சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென நுழைந்தனர். அப்போது, அவர் வீட்டில் இல்லாததால் திரும்பினர். 

Advertisement

இதைத்தொடர்ந்து, மீண்டும் நேற்று இரவு நான்கு சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு சென்றதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. ப.சிதம்பரம் வீட்டில் இல்லாத நிலையில் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். 

அந்த நோட்டீசில் ப.சிதம்பரம் இரண்டு மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிதம்பரத்திற்கு அந்த நோட்டீஸின் நகலை மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பி வைத்துள்ளனர். 
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் சிபிஐ இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Advertisement