This Article is From Apr 17, 2019

எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே எப்படி 'துப்பு' கிடைக்கிறது? ப.சிதம்பரம் கேள்வி

எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எப்படி 'துப்பு' கிடைக்கிறது? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே எப்படி 'துப்பு' கிடைக்கிறது? ப.சிதம்பரம் கேள்வி

முன்னதாக, வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பாக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் நிலையில், அவரது வீட்டில் இந்த தொகுதி வாக்களர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, துரை முருகனின் வீட்டில் கடந்த மார்ச் 30-ம்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதில் ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றறப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் ரூ. 11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைப்பதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தார். தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. பரப்புரை நிறைவடைந்த ஒரு மணி நேரத்தில் அந்த அறிவிப்பு வெளியானது.

இதனிடையே, நேற்று மாலை தூத்துக்குடியில் உள்ள கனிமொழி வீட்டில் சுமார் 2 மணி நேரத்திற்கும் அதிகாமாக சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், எதுவும் கிடைக்காமல் சோதனையை முடிந்து அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது, 2019 தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலின் அடையாளமே வருமான வரித் துறையின் எதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே..

அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே 'துப்பு' கிடைக்கிறது? திருமதி கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனை, எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

.