This Article is From Apr 24, 2020

“ஊரடங்கு என்ற தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்?”- ப.சிதம்பரம் ஆதங்கம்

"வேலையில்லாமல், பணமில்லாமல், உணவில்லாமல் 40 நாட்களுக்குப் பிறகும் முடங்கிக் கிடப்பதற்கு யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்"

“ஊரடங்கு என்ற தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்?”- ப.சிதம்பரம் ஆதங்கம்

"தங்கள் சொந்த ஊரில் தங்கள் குடும்பத்துடன் தங்கள் மொழி பேசும் மக்களிடையே இருக்க வேண்டும் என்ற உணர்வை ஊரடங்கு என்ற தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்?"

ஹைலைட்ஸ்

  • புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி ஆதங்கப்பட்டுள்ளார் சிதம்பரம்
  • ஊரடங்கால் அமைப்புசாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
  • மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்

கொரோனா பரவலை மட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய அளவில் இரண்டாவது ஊரடங்கு அமலில் உள்ளது. மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள்தான். அவர்களின் பிரச்னை பற்றி தனது கருத்தை ஆதங்கத்தோடு தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். 

அவர், “நாடு முழுவதும் ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் குடியேறிய மக்களுக்கு (migrant persons) அந்த வாய்ப்பினை அரசு தர வேண்டும்

வேலையில்லாமல், பணமில்லாமல், உணவில்லாமல் 40 நாட்களுக்குப் பிறகும் முடங்கிக் கிடப்பதற்கு யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

தங்கள் சொந்த ஊரில் தங்கள் குடும்பத்துடன் தங்கள் மொழி பேசும் மக்களிடையே இருக்க வேண்டும் என்ற உணர்வை ஊரடங்கு என்ற தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பல மாநிலங்களில் வசித்து வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஊரடங்கு அறிவிப்பைத் தொடர்ந்து நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருகிறார்கள். பலர், 21 நாட்களுக்கு அமல் செய்யப்பட்ட முதல் ஊரடங்கின்போது அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டிருந்தனர். ஆனால், ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களின் நிலைமை சிக்கலானது.

அதனால், ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு, இரண்டாம் ஊரடங்கு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணப்பட ஆரம்பித்தார்கள். இப்படி பயணம் செய்த பலர், பசி மற்றும் உடல் சோர்வால் வழியிலேயே இறந்துவிடும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.  

.