ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், ப.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் மற்றும் 16 பேர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை பதிவு செய்துள்ளது. சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை, 2006-ம் ஆண்டு ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்தில், அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தன. அந்த அனுமதி வழங்கப்பட்ட போது ப.சிதம்பரம் காங்கிரஸின் மத்திய ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்தார்.
சி.பி.ஐயின் தகவல் படி, மொரீஷியஸின் குளோபல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் (மேக்சிஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனம்) இந்தியாவில், ஏர்செல் நிறுவனத்தின் மீது 800 கோடி ரூபாய் முதலீடு செய்ய அனுமதி கோரியுள்ளது.
இதற்கான அனுமதியை, பொருளாதார விவகாரங்களுக்கான கேபினெட் கமிட்டி தான் தர வேண்டும். ஆனால் நிதி அமைச்சகத்திடம் இருந்து அனுமதி வழங்கப்பட்டது. 600 கோடி ரூபாய் வரையிலான முதலீடுகளுக்கு மட்டும் தான், நிதி அமைச்சகம் அனுமதி அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அனுமதி வழங்கப்பட்ட பிறகு, ஏர்செல் நிறுவனம் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு பணம் அனுப்பியதாக சி.பி.ஐ குற்றம்சாட்டுகிறடு. இது குறித்து ப.சிதம்பரம் “ இந்த வழக்கு பொய்யான தகவல்களால் ஜோடிக்கப்பட்டது “ என்று கூறுகிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கார்த்தி சிதம்பரத்தின் 1.16 கோடி ரூபாய் சொத்துக்கள் மற்றும் அவருக்கு தொடர்புடையதாக கூறப்பட்ட நிறுவனத்தையும் அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.