This Article is From Dec 04, 2019

“நாளை நாடாளுமன்றத்தில் இருப்பார் ப.சிதம்பரம்!”- NDTV-க்கு கார்த்தி சிதம்பரம் பேட்டி

P Chidambaram Bail: 'நாளை காலை 11 மணி அளவில் அவர் நாடாளுமன்றத்துக்கு வந்துவிடுவார்'

“நாளை நாடாளுமன்றத்தில் இருப்பார் ப.சிதம்பரம்!”- NDTV-க்கு கார்த்தி சிதம்பரம் பேட்டி

'மத்திய அரசிடம் எங்களுக்கு எதிராக ஆதாரம் இருந்தால், அவர்கள் அதை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.'

New Delhi:

ஐ.என்.எக்ஸ் மீடியா பணமோசடி வழக்கில் (INX Media Case) கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்குப் (P Chidambaram) பிணை கொடுத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் சிதம்பரம், நாளை நாடாளுமன்றத்துக்கு வருவார் என்று அவரது மகன், கார்த்தி சிதம்பரம், NDTV-க்கு அளித்த பேட்டியில் தகவல் தெரிவித்துள்ளார். 

சிதம்பரம், 105 நாட்களாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியே வருகிறார். பிணை கொடுத்த உச்ச நீதிமன்றம், சிதம்பரம், நாட்டை விட்டு வேறு எங்கும் செல்லக் கூடாது என்றும், எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக, வழக்குத் தொடர்பாக சிதம்பரம், ஊடகங்களிடம் பேசக் கூடாது என்றும், அறிக்கைகள் வெளியிடக் கூடாது என்றும், சாட்சியங்களைத் தொடர்பு கொள்ள முயலக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

“என் அப்பா வீட்டுக்கு வருகிறார் என்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது மிகப் பெரிய காத்திருப்பாக இருந்தது. நீதிமன்றம் அவருக்குப் பிணை கொடுத்தது மிகப் பெரிய நிம்மதியாகும். இன்று அவர் வீட்டுக்கு வந்துவிடுவார். 

நாளை காலை 11 மணி அளவில் அவர் நாடாளுமன்றத்துக்கு வந்துவிடுவார். இது குறித்து அவரிடம் ஏற்கெனவே பேசிவிட்டேன். அவர் நாடாளுமன்றம் வருவது உறுதி.

இது குறித்து நான் எனது வழக்கறிஞர்களிடம் பேசிவிட்டேன். வழக்கைத் தவிர வேறு எது குறித்து வேண்டுமானாலும் அவர் பேசலாம். ஒரு அரசியல்வாதியாக அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக பேசுவதற்கு அவருக்கு முழு உரிமையும் உள்ளது.

மத்திய அரசிடம் எங்களுக்கு எதிராக ஆதாரம் இருந்தால், அவர்கள் அதை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மூடிய கவரில் அதை வைத்திருக்கக் கூடாது,” என்று NDTV-க்கு அளித்தப் பேட்டியில் கூறியுள்ளார் கார்த்தி சிதம்பரம். 

கடந்த 2000 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது. 

.