This Article is From Oct 03, 2019

அக்.17 வரை ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு! - வீட்டுச் சாப்பாடுக்கு அனுமதி

கடந்த செப்.5ம் தேதி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அக்.17 வரை ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு! - வீட்டுச் சாப்பாடுக்கு அனுமதி

வீட்டுச் சாப்பாடு வழங்கப்பட வேண்டும் என்று சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

New Delhi:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் (INX Media Case) டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் (P Chidambaram), நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு வீட்டுச் சாப்பாடு வழங்கவும் அனுமதி வழங்கியுள்ளது. 

முன்னதாக, கடந்த 2007-இல் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வரும் சிபிஐ, ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. பின்னா், அவரை காவலில் எடுத்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இதைத்தொடா்ந்து, கடந்த செப்.5ம் தேதி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, டெல்லி திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் இருக்கும் ப.சிதம்பரம் சிறையிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி பிணை கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் (Delhi High Court) முறையிட்டிருந்தார். அதில், அவருக்கு பிணை கொடுக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. 

ஜாமீன் கொடுக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், “வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்தால் ஆதாரங்களைக் கலைக்க முடியாது என்றாலும், சாட்சிகளிடம் தாக்கம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது” என்று கூறியது. 

இந்நிலையில், ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்ட நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே, சிறையில் வழங்கப்படும் உணவை சாப்பிட்டு சாப்பிட்டு சிதம்பரத்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வீட்டுச் சாப்பாடு வழங்கப்பட வேண்டும் என்று சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். 

இந்நிலையில், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. மேலும், அவரது வீட்டு உணவு வழங்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

.