காஷ்மீர் (Kashmir) விவகாரத்தில் சர்வதேச கவனத்தைக் குவிக்க தவறிவிட்டதாக ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan), சர்வதேச நாடுகள் அந்த விவகாரத்தைக் கையாண்ட விதத்தையும் விமர்சனம் செய்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் ஜம்மூ காஷ்மீருக்கு (Jammu and Kashmir) அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370-ஐ (Article 370) ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது இந்திய அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், சர்வதேச அளவில் இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து எழுப்பி வந்தது. ஆனால், அதில் போதிய கவனத்தை எந்த அமைப்பும், நாடுகளும் செலுத்தாத நிலையில் விரக்தி மனநிலைக்கு பாகிஸ்தான் வந்துவிட்டது.
“சர்வதேச நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் நடந்து கொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கிறது. மோடி மீது எந்த அழுத்தமும் இல்லை. ஆனால், நாங்கள் தொடர்ந்து அவர் மீது அழுத்தம் கொடுப்போம்.
இந்தியாவின் பொருளாதார பலமும், சர்வதேச அளவில் அந்நாட்டின் ஆதிக்கமும் காஷ்மீர் விவகாரத்தில் அதற்குச் சாதகமாக மாறியுள்ளது. இந்தியாவை 120 கோடி மக்கள் இருக்கும் சந்தையாக நாடுகள் பார்க்கின்றன” என்று நொந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளார் இம்ரான் கான்.
ஐக்கிய நாடுகள் (UN) சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் நியூயார்க்கில் தான் உள்ளனர். அங்கு நடந்த ஒரு கூட்டத்தில்தான் இம்ரான் கான், இத்தகைய கருத்தைத் தெரிவித்துள்ளார்.
நேற்று காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசும்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “இரண்டு நாடுகளும் விருப்பப்பட்டால் நான் காஷ்மீர் குறித்து மத்தியஸ்தம் செய்ய தயார்” என்று மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையீடு இருக்கக் கூடாது என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.