பஞ்சாப் எல்லைக்குள் ஊடுருவி பாகிஸ்தானின் ட்ரோன் விமானங்கள் உளவு பார்த்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, இந்திய விமானப்படை அலெர்ட் செய்யப்பட்டு சுகோய் 30 எம்.கே.ஐ. போர் விமானங்கள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன.
பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான எஃப்-16 ரக விமானங்கள் பஞ்சாபின் கெம்கரான் பகுதிக்குள் வந்து உளவு பார்த்ததாகவும், பின்னர் உடனடியாக அவை திரும்பிச் சென்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2 மாதங்களாக பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவதும், அவற்றை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்துவதும் நடந்து வருகிறது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில எல்லைப் பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் நடந்தன.
குறிப்பாக கடந்த மாதம் 26-ம்தேதி இந்திய விமானப்படை பாலக்கோட்டில் புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தியது. அதற்கு பின்னர் பாகிஸ்தான் ராணுவம் உளவு பார்க்கும் வேலைகளை அதிகரித்திருக்கிறது.
ஆளில்லா உளவு விமானங்களை இயக்குவது மிக எளிது என்பதாலும், அவற்றின் விலையும் குறைவு என்பதாலும் பாகிஸ்தான் ட்ரோன்களை அனுப்புகிறது. கடந்த மார்ச் 4-ம்தேதி ராஜஸ்தானின் பிகானிரில் பாகிஸ்தானின் ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
அதற்கு முன்பாக இந்தியாவின் ஸ்பைடர் ரக ஏவுகணை குஜராத்தின் கட்ச் பகுதியில் உளவு பார்த்த பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. பிப்ரவரி 14-ம்தேதி நடந்த புல்வாமா தாக்குதலும் அதற்கு அடுத்தடுத்து நடந்த சம்பவங்களும் இந்தியா - பாகிஸ்தான் உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளன.