This Article is From Sep 09, 2019

பாக். வான்வெளியை பயன்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுமதி மறுப்பு!

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையில் அதிக பதற்றம் நிலவிய நேரத்தில் இந்த முடிவு குறித்த தகவல் வந்துள்ளது.

பாக். வான்வெளியை பயன்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுமதி மறுப்பு!

ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் சுலோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு ராம்நாத் கோவிந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

New Delhi:

ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் சுலோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் திங்கட்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்திற்காக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்திக்கொள்ள இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானிடம் அனுமதி கோரினர். 

அண்மையில் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் AFP செய்தி நிறுவனத்திடம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறும்போது, இருதரப்பு பிரச்சனைகளில் இந்தியாவின் 'சமீபத்திய நடத்தையே' இந்த முடிவுக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், குரேஷி கூறும்போது, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுக்கும் அசாதாரண முடிவை, காஷ்மீர் நிலைமையைக் கருத்தில் கொண்டே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

எனினும், ஜம்மு-காஷ்மீர் விவகாரம் என்பது உள்நாட்டு விவகாரம் என்றும் பாகிஸ்தான் இதில் கேள்வி கேட்க உரிமையில்லை என இந்தியா ஏற்கனவே கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் திங்களன்று ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் சுலோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகள் குறித்து அந்த நாடுகளின் உயர் தலைமைக்கு அவர் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஏற்பட்ட வான்வெளி சண்டைகளுக்கு பின்னர் இந்திய வான்வெளி போக்குவரத்திற்கு பாகிஸ்தான் தனது வான்வெளியை பயன்படுத்த அனுமதி மறுத்தது. எனினும், இது முக்கிய சர்வதேச விமான வழித்தடங்களை பாதிக்கும் என்பதால், பல மாதங்களுக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அதன் வான்வெளியை பொதுமக்கள் போக்குவரத்திற்கு மீண்டும் திறந்து அனுமதி அளித்திருந்தது. 
 

(With inputs from PTI and AFP)

.