தேசிய அளவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கை மே 3 வரை நீட்டித்து பிரதமர் நநேர்திர மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார். இதன் காரணமாக அணைத்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பை கண்டிவாலி பகுதியை சார்ந்த இரண்டு சாதுக்கள் குஜராத் மாநிலத்திற்குத் துக்க நிகழ்ச்சிக்காக சென்றுகொண்டிருந்த போது மும்பையிலிருந்து 125 கி.மீ தொலைவில் காரில் இருந்த மூவர் மீது அப்பகுதி உள்ளூர் மக்கள் திடீரென தாக்குதல் நடத்தினர் இதில் இரண்டு சாதுக்கள் மற்றும் வாகன ஓட்டுநர் என மூவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை தடுக்க முயன்ற காவல்துறையினர் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் சிக்னே மகாராஜ் கல்பவ்ருக்ஷகிரி (70), சுஷில்கிரி மகாராஜ் (35), நிலேஷ் தெல்கேட் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் ஒருவர் கூட இஸ்லாமியர்கள் இல்லையென அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தற்போது தெரிவித்திருக்கிறார். இந்த தாக்குதலுக்கு மதச்சாயலை பூச முற்படுவதாக மாநில எதிர்க்கட்சியான பாஜகவை தேஷ்முக் விமர்சித்துள்ளார்.
சிலர் இதனை அரசியலாக்க முயல்கின்றனர். இது அதற்கான நேரம் அல்ல. நாம் தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராக ஓரணியில் நின்று எதிர்த்துப் போராட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மும்பையிலிருந்து 125 கி.மீ தொலைவில் நடந்த இந்த தாக்குதலுக்கு தவறாக அடையாளம் காணப்பட்டது ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் இந்த தாக்குதலுக்கு மதச்சாயம் பூசு வேண்டாம் என்றும் எச்சரித்திருந்தார் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே. மேலும், இதில் இந்து-இஸ்லாமியர்களுக்கான பிரச்சினை இல்லை. எனவே இது வகுப்புவாத பிரச்சனையும் இல்லை. இந்த சம்பவத்திற்குப் பிறகு இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் முதல்வர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதில் மூவர் தாக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக, திருடர்கள் என்கிற வதந்தி பரவியது காரணம் என காவல்துறையும், குழந்தை கடத்தல் என்கிற வதந்தி பரவியது காரணம் என மாவட்ட ஆட்சியரும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.