This Article is From Jul 02, 2019

நிர்வாகிகள் விலகிச் சென்றால் கட்சி பலப்படும்: தினகரனின் அடடே விளக்கம்!!

நிர்வாகிகள் தங்கள் சொந்த காரணங்களுக்காக, சுயநலத்திற்காக விலகி செல்வதை யாராலும் தடுக்க இயலாது

நிர்வாகிகள் விலகிச் சென்றால் கட்சி பலப்படும்: தினகரனின் அடடே விளக்கம்!!

நிர்வாகிகள் விலகிச் செல்ல செல்ல, கட்சி பலப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

அதிமுகவில் இருந்து தினகரனையும், சசிகலாவையும் நீக்கிய பிறகு, அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்துவது வரையிலும் டிடிவி தினகரனின் நம்பிக்கைக்குரியவராக, செந்தில் பாலாஜி, தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் இருந்து வந்தனர்.

ஆனால், மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே, தினகரனின் நம்பிக்கையாக திகழ்ந்த செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். தொடர்ந்து, கரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றியும் பெற்றார். 

இதனிடையே, அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வந்த தங்க தமிழ்செல்வன், நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனை எதிர்த்து, அமமுக சார்பில் களமிறக்கப்பட்டார்.

ஆனால், இத்தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து, தங்கதமிழ்செல்வன் மீண்டும் அதிமுகவுக்கே செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், தங்க.தமிழ்செல்வனும் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து, தென் மாவட்டங்களில் அமமுக வளர்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியானது. இவர், மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் தென்சென்னை வேட்பாளராக களம் இறங்கியவர் ஆவார்.  

இதைத்தொடர்ந்து, நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இசக்கி சுப்பையா, டிடிவி தினகரன் அளித்த பேட்டியால் தனக்கு மனவருத்தம் ஏற்பட்டதாக தெரிவித்தார். சுயலாபம் பார்ப்பதாக இருந்தால் அமமுகவில் சேர்ந்தே இருக்க மாட்டேன் என்று கூறிய அவர், தற்போது அமமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்ததார்.

தொடர்ந்து, ஜூலை 6-ஆம் தேதி முதலமைச்சர் முன்னிலையில் 20,000 பேருடன் அதிமுகவில் இணைவதாக தெரிவித்த அவர், தொண்டர்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், இசக்கி சுப்பையா விலகல் குறித்து அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறும்போது, நிர்வாகிகள் தங்கள் சொந்த காரணங்களுக்காக, சுயநலத்திற்காக விலகி செல்வதை யாராலும் தடுக்க இயலாது.

அவர்களை தடுத்து நிறுத்தி என்ன ஆக போகிறது? எங்களால் கைகாட்டப்பட்ட நிர்வாகிகள் எங்களை விலகிப் போவதால் எங்கள் இயக்கம் மேலும் வலுப்படும். அதனால் பதிப்பு இல்லை என்று அவர் கூறியுள்ளார். 

 

.