New Delhi: வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய போராட்டக்காரர்களும், அதற்கு ஆதரவாகக் களமிறங்கிய போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரிய அளவிலான வன்முறை வெடித்திருக்கிறது. இந்த கலவரத்தில் ஒரு தலைமைக் காவலர் உட்பட ஏழு பேர் இறந்திருப்பதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.
மேலும், இந்த கலவரத்தின்போது துணை ராணுவப்படையினரும், டெல்லி காவல் துறையினருமாக சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் வடகிழக்கு கலவரம் குறித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பா. சிதம்பரம் “உணர்வற்ற மற்றும் குறுகிய பார்வை கொண்ட தலைவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்கான விலையை டெல்லி மக்கள் செலுத்துகிறார்கள்" என்று விமர்சித்திருக்கின்றார்.
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரை இதனை அமலாக்கக் கூடாது என்றும், போராட்டக்காரர்களின் குரல்களை அரசாங்கம் கேட்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியா 1955-லிருந்து குடியுரிமை சட்டத்தில் திருத்தமின்றி இருந்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது புதியதாக இதில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவசியம் என்ன இருக்கிறது என்று கேள்வியெழுப்பியுள்ளார். இதனால் உடனடியாக இந்த சட்ட திருத்தத்தினை கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போது கூட தாமதமாகவில்லை. குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களின் கோரிக்கையினை ஏற்று, உச்ச நீதிமன்றத்தில் இச்சட்டம் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் நிறுத்தி வைத்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
.இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நமது சமூகத்தினை ஆழமாக பிளவுபடுத்தும் என்று காங்கிரஸ் முன்கூட்டியே எச்சரித்திருந்தது. எனவே, உடனடியாக இதனைக் கைவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், இந்த எச்சரிக்கையானது செவிடன் காதில் விழுந்ததைப்போல மாறிப்போனதாக ப.சிதம்பரம் குறிப்பிட்டிருந்தார்.