This Article is From Jan 08, 2019

55 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சொன்னது மு.க.ஸ்டாலினை பற்றியது போல: டிடிவி தினகரன்

55 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சொன்னது மு.க.ஸ்டாலினை பற்றியது போல என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

55 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சொன்னது மு.க.ஸ்டாலினை பற்றியது போல: டிடிவி தினகரன்

முன்னதாக, டிடிவி தினகனை கடுமையாக விமர்சித்து இன்றைய முரசொலியில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், மானத்தைப் பற்றிக் கவலைப்படும் ஆயிரம் பேருடன் கூட விவாதிக் கலாம். மானத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரே ஒரு ஆளுடன் கூட விவாதிக்க முடியாது என்றார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார். இதில் டி.டி.வி. தினகரன் இரண்டாவது ரகம்!

ஆர்.கே. நகர் தொகுதி மக்களை 20 ரூபாய் நோட்டைக் கொடுத்து ஏமாற்றிய டி.டி.வி. தினகரன் சொல்கிறார், "தேர்தலைப் பார்த்து தி.மு.க. பயப் படுகிறது' என்று. கட்சி ஆரம்பித்து சில மாதங்களே ஆன சில்லறைகளுக்கு சிகரங்களைப் பற்றி என்ன தெரியும்? நீயே அயிரை மீன். உனக்கு ஏன் விலாங்குச் சேட்டை? என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது,

கட்சியை, மக்களை காக்க பொதுத்தொண்டுக்கு வந்திருக்கிறேன் என்று யாராவது சொன்னால் நம்பாதே, அவனது இன்றைய நிலையை பார், அவன் தியாகியா அல்லது தகுதியை தாண்டிய செல்வந்தனா என்பது புரியும். அதிலும் தன் குடும்பம், பிள்ளைகள் என்று வந்துவிட்டால் அவன் சுயநலப் புலிதான் என்றார் பெரியார்.

திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலேறி சென்னை வந்த பாரம்பரியத்திலிருந்து வந்து, இன்றைக்கு ஆசியப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக வலம் வரும் ஸ்டாலின் தான் அந்த சுயநலப் புலி!

லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பால் உருவான பல நூறு கோடி மதிப்புள்ள முரசொலி அறக்கட்டளைக்கு தனது மகனை அறங்காவலராக நியமித்த யோக்கியர் ஸ்டாலினைப் பற்றித்தான் 55 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் இப்படிச் சொன்னார் போலும்.

லட்சம் கோடி மதிப்பிலான 2ஜி ஊழல் வழக்கில் தனது தங்கையை, தாயை சிறைக்கும் விசாரணைக்கும் அனுப்பி வைத்த இந்த சுயநலப்புலிதான் இன்று மற்றவர்களின் தரம் பற்றி பேசுகிறது.

பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும் அரா மீனைப் போல, தேர்தலுக்கான கூட்டணிக்கு காங்கிரஸ்; தேர்தலுக்குப் பிறகான கூட்டணிக்கு பி.ஜே.பி. என வேஷமிடும் அரா மீன் ஸ்டாலின், அயிரை மீனைப் பார்த்து பயந்து பதுங்குவது ஏன்..? என ஸ்டாலின் குறித்து டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்தார்.

.