சைமன்ஸ் தீவுகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Atlanta: அமெரிக்காவில் கரைக்கு ஒதுங்கிய 50 குட்டித் திமிங்கலங்களை கரையில் இருந்த பொதுமக்கள் நீண்ட நேரம் முயற்சி செய்து கடலுக்குள் அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஜார்ஜியா மாகாணத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புனித சைமன்ஸ் தீவுகளில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கின்றது. இங்கு கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்களை பார்த்தவர்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தனர். அவை அளவில் சிறியதாய் இருப்பதையும், அலை காரணமாக கடலுக்குள் செல்வதில் சிரமம் அடைந்ததையும் மக்கள் பார்த்தனர்.
இதையடுத்து நீண்ட நேரம் முயற்சி செய்து குட்டி திமிங்கலங்களை கடலுக்குள் அனுப்பி வைத்தனர். இருப்பினும் கரைக்கு வந்த 50 திமிங்கலங்களில் 3 திமிங்கல குட்டிகள் உயிரிழந்து விட்டன.
பைலட் வகையை சேர்ந்த இவை 7 மீட்டர் நீளம் வரைக்கும் வளருமாம். பொதுவாக இவை கரையில் இருந்து 160 கிலோ மீட்டர் உள்ளேதான் வசிக்கக்கூடியவை.
ஆனால் தற்போது இவை என்ன காரணத்திற்காக கரை ஒதுங்கின என்பது தெரியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்ற திமிங்கலங்கள் ஏதேனும் கரைக்கு வருகிறதா என்பது குறித்து ஹெலிகாப்டரில் ரோந்து மேற்கொண்டனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)