New Delhi: கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 240 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளத்தின் அறுவடைத் திருநாளான ஓணம் களையிழந்து காணப்படுகிறது.
இந்நிலையில், "வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இயன்றளவு உதவிசெய்து இந்த ஆண்டு ஓணம் திருநாளைக் கொண்டாடுங்கள். பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட நமது மக்கள் நிவாரண முகாம்களில் உள்ளனர். நமது மாநிலத்தின் வரலாற்றில் மிக மோசமான பேரிடரை நாம் எதிர்கொண்டு தாக்குப்பிடித்துள்ளோம். அதேபோல மீண்டெழுவதிலும் பிறருக்கு எடுத்துக்காட்டாக நாம் விளங்கவேண்டும்" என்று தமது மக்களுக்கு கேரள முதல்வர் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 தொடங்கி 25 வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும். மலையாள நாட்காட்டியில் முதல் மாதமான சிங்கத்தின் தொடக்கத்தில் ஓணம் வருகிறது. இது கேரள மாநிலத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.
வழக்கமாக ஓணசத்யா (விருந்து) நாட்டுப்புறப் பாடல்கள், படகுப்போட்டி என களைகட்டும் ஓணம் பண்டிகையை வெள்ள பாதிப்பினால் பல குடும்பங்கள் கொண்டாட முடியாத நிலையில் உள்ளன.