புவிஈர்ப்பு விசையை கண்டுபிடித்த ஐன்ஸ்டீன் எனக் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நியூட்டன் என்பதற்கு பதிலாக ஐன்ஸ்டீன் என்று தவறுதலாக கூறிவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
முன்னதாக பொருளாதார மந்த நிலை குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஓலா, உபர் போன்றவைகளை அதிகம் பயன்படுத்துவதால்தான் மோட்டார் வாகனத் துறை கடும் பின்னடைவை சந்தித்தது என கூறினார்.
இது மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்தது. சமூக வலைதளங்கள் அனைத்திலும் நிர்மலா சீதாராமன் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, பியூஸ் கோயல் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும், ட்வீட்டர் டிரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்தது.
இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஐசக் நியூட்டனுக்கு பதிலாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை கூறிவிட்டேன். நாம் அனைவரும் தவறு செய்யும் வாய்ப்பைப் பெறுகிறோம். தவறும் செய்து விடுகிறோம் என்றார்.
இதே ஐன்ஸ்டீன், தவறு செய்யாத ஒரு நபர், எதையும் புதிதாக செய்ய முயற்சிப்பதில்லை என்று கூறியுள்ளார் என மீண்டும் ஐன்ஸ்டீன் கருத்தை மேற்கோள் காட்டினார்.
மேலும், நான் தவறு செய்வேன் என்று பயப்படுபவன் அல்ல... என் தவறை உணர்ந்த தருணம், அதனை நான் தெளிவுபடுத்தியுள்ளேன் என்று அவர் கூறினார்.
முன்னதாக கடந்த செப்.12ஆம் தேதி நாட்டின் பொருளாதார நிலை குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் பியூஸ் கோயல், நாடு 5 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார நிலையை அடைய வேண்டுமானால், 12 சதவீத வளர்ச்சியுடன் செல்ல வேண்டும். ஆனால் நாம் தற்போது, 6-7 சதவீத வளர்ச்சி தான் கொண்டுள்ளோம்.
பொருளாதாரத்தில் கணக்கீடுகளைக் கொண்டுவராதீர்கள்... ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க அவருக்கு கணக்கு உதவவில்லை என்று கூறினார்.