This Article is From May 18, 2020

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை உயர்த்த திட்டம்!

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என்பதை இரவு 7 மணி வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை உயர்த்த திட்டம்!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை 2 மணி உயர்த்த திட்டம்!

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை உயர்த்த திட்டம்
  • 2 மணி நேரம் அதிகரிக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு
  • மாலை 5 மணி வரை என்பதை இரவு 7 மணி வரை நீட்டிக்க திட்டம்

மதுக்கடைகளில் விற்பனை நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 24-ம்தேதியில் இருந்து அமலில் உள்ளது. இதனால் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழக அரசு மே.7ம் தேதி முதல் மீண்டும் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் டாஸ்மாக் கடையை திறக்க தடை விதிக்க முடியாது என்று தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 7ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுக்களை வாங்கிசென்றனர். 

மக்களின் அத்தியாவசிய தேவைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சூழலில், அத்தனையையும் தகர்த்து ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் பொது முடக்கம் முடியும் வரையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து, ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆன்லைனில் மது விற்க முடியாது. அவ்வாறு செய்தால் சட்டம் ஒழுங்கு, மது கடத்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். அதனால் ஆன்லைன் சாத்தியம் கிடையாது என தமிழக அரசு வாதிட்டுள்ளது. 

மேலும், தனிமனித இடைவெளியை காவல் அதிகாரிகள்  துரிதமாக கண்காணித்தார்கள் என்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படிதான் மாநிலத்தல் மதுக்கடை திறக்கப்பட்டது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றம் நீதிபதிகள், மதுபானக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு  தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் கடைகள் செயல்படுகிறது. கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில் டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என்பதை இரவு 7 மணி வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளனர். நேர நீட்டிப்பு  குறிப்பு எப்போது வேண்டுமானாலும் உத்தரவு வருமென விற்பனையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு நாளைக்கு 500 டோக்கன் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், 1500 டோக்கனாக உயர்த்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

.