PM-care கணக்கில் முதல் ஐந்து நாட்களில் 3,076 கோடி நிதி சேர்ந்துள்ளதாக அரசாங்கம் வெளியிட்ட தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் நிதியளித்தவர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாகவும், அதனை அரசு ஏன் அறிவிக்கவில்லையென்றும் என்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.
பேரிடர் காலங்களில் நிதி பற்றாக்குறையை போக்குவதற்கு PM-care வங்கிக் கணக்கு கடந்த மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இந்த கணக்கு துவங்கப்பட்ட முதல் ஐந்து நாட்களில் ரூபாய் 3,076 கோடி நிதி வந்துள்ளது. இந்த கணக்கில் பெரும் தொகையை செலுத்தியவர்களின் பெயர் முழுமையாக வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் ப.சிதம்பரம், மத்திய அரசு தாராளமாக நிதியளித்தவர்களின் பெயரினை வெளியிட மறுப்பது ஏன் என்று டிவிட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், எல்லா தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அல்லது அறக்கட்டளைகளும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக நிதியளிப்போரின் பெயரினை வெளியிட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் PM-careக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருப்பது ஏன் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள 3,076 கோடி ரூபாயில், 3,075.85 கோடி உள்நாட்டு தன்னார்வ பங்களிப்பிலும்,. 39.67 லட்சம் வெளிநாட்டு பங்களிப்பிலும் வந்துள்ளது என்றும், கணக்கு தொடங்கப்பட்ட போது 25 2.25 லட்சம் இருந்ததாகவும், இந்த நிதிக்கு சுமார் 35 லட்சம் வட்டி கிடைத்துள்ளதாகவும் அரசின் அறிக்கை கூறியுள்ளது.
முன்னதாக PM-care கணக்கு குறித்து விவரங்களை பெற என்.டி.டி.வி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், இந்த சட்டத்தின் கீழ் PM-care கணக்கு குறித்து விவரங்களை அறிய முடியாது எனக்கூறி அரசு விவரங்களை கொடுக்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.