This Article is From Apr 11, 2020

மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்ற பிரதமர்! ஏப்ரல் 30-வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில முதல்வர்கள் வலியுறுத்தினர்.

மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்ற பிரதமர்! ஏப்ரல் 30-வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு

ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்

ஹைலைட்ஸ்

  • ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்கள் மோடிக்கு ஆலோசனை
  • மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க முதல்வர்கள் வலியுறுத்தல்
  • முதல்வர்களின் கோரிக்கைகளை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டுள்ளார்

கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கை, ஏப்ரல் 30-ம்தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில முதல்வர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஏப்ரல் 30-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாகும் என தெரிகிறது. 

பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் ட்வீட் செய்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 'ஊரடங்கை நீட்டித்து சரியான முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளார். நாம் முன்னரே ஊரடங்கை கடைபிடித்து வருவதால் மற்ற வளர்ந்த நாடுகளை விட இந்தியா அதிகம் பாதிக்கப்படாமல் உள்ளது. ஊரடங்கை திரும்பப் பெற்றால் நாம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும். ஊரடங்கை நீட்டிப்பது மிக மிக அவசியம்' என்று தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி அமல்படுத்தியிருந்தார். இந்நிலையில், வரும் ஏப்.14ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து, அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். 

இந்த கூட்டத்தின்போது ஊரடங்கை ஏப்ரல் 30-ம்தேதி வரைநீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில முதல்வர்கள் வலியுறுத்தினர். 

இதனிடையே, ஒடிசா மற்றும் பஞ்சாபில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறும்போது, இது, கடந்த நூற்றாண்டுகளில் மனித இனம் பார்த்திராத அளவு மிகப்பெரும் அபாயமாகும். வாழ்க்கை எப்போதும் ஒரே போன்று இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என மத்திய அரசுக்கு அளித்த கடிதத்தில், பீகார் அரசு தெரிவித்துள்ளது.

இந்த வீடியோ கான்பரன்ஸ் நடந்த போது சுகாதார அமைச்சகம் ஒரு விளக்கக்காட்சியை திரையிட்டது. பின்னர் ஒவ்வொரு மாநில முதல்வர்களாக பிரதமர் மோடியுடன் பேசினர். அப்போது, பெரும்பாலான முதல்வர்கள், மாநிலங்கள் ஊரடங்கை அறிவிப்பதை விட, நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். 

இதனை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் ஏப்ரல் 30-ம்தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.