This Article is From Dec 22, 2019

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மரியாதை அளிக்கவும்: பிரதமர் மோடி

டெல்லி பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் விதமாக புதிதாக சில கோஷங்களையும் பிரதமர் மோடி முழங்கினார்.

டெல்லி பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

New Delhi:

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே பாஜக ஆட்சியின் கொள்கை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த போராட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இதுவரை வாய்திறக்காமல் அமைதி காத்து வந்தார். இந்நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் 'பன்முகத்தன்மையை' மதிப்பதாக தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, டெல்லி பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் விதமாக புதிதாக சில கோஷங்களையும் அவர் முழங்கினார். கூட்டத்தை நோக்கி நான் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்று கூறுவேன், நீங்கள் இந்தியாவின் தனித்துவம் என்று கூற வேண்டும் என்றார். 

அதன்படி, மூன்று முறை இந்த கோஷத்தை முழங்கினார். டெல்லியில் பல்வேறு பகுதிகளிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில், அந்த எதிர்ப்புகளை சமாளிக்கும் சமிக்ஞையாக காணப்பட்டது. தொடர்ந்து பேசிய அவர், என்னுடைய கொள்கைகள் ஏதேனும் மக்களிடையே பாகுபாடு காட்டினால், தெரிவிக்கும் படி அவர் சவால் விடுத்தார். எழுந்து நின்று நாடாளுமன்றத்தை மதிக்கவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்கவும் என்றார்.

"இந்த மசோதா நிறைவேற்றப்பட்டவுடன், சில கட்சிகள் வதந்திகளைப் பரப்புகின்றன.. வெறுப்பைப் பரப்புபவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்: உங்கள் மதத்தை நாங்கள் கேட்டோமா?, நீங்கள் எந்தக் கட்சியை ஆதரிக்கிறீர்கள் என்று கேட்டோமா? நாங்கள் ஏதாவது ஆதாரம் வேண்டும் என்று கேட்டோமா? 

மத்திய அரசின் உதவிகள் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், எல்லோருக்கும் சென்றடைகிறது. நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன்.. பின்னர் பாகுபாடு எங்கிருந்து வந்தது? அதனை தேசத்தில் அனைவருக்கும் முன்பும் தெரியப்படுத்தவும் என்று அவர் கூறினார். 

50 கோடி மக்களின் இலவச சிகிச்சைக்கு உதவிய நாட்டின் மிகப்பெரிய சுகாதார திட்டத்தை தொடங்கி வைத்த போதும், யாருடைய மதத்தையும் அரசு ஒரு போதும் கேட்டதில்லை என்று அவர் கூறினார். 

பின்னர் சர்வதேச அளவில் இந்தியாவை அவமானப்படுத்த இந்த சதி ஏன் நடக்கிறது? நான் கூற விரும்புவது என்னவென்றால், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மோடியை அவமானப்படுத்துங்கள், மோடியை வெறுங்கள்.. ஆனால் மக்களின் சொத்துக்களை எரிக்க வேண்டாம்.

மேலும், காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்யும்போது, அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர், அவர்கள் மீது கற்கள் வீசப்படுகிறது "என்று அவர் கூறினார்.

.