This Article is From Jan 05, 2019

ஜனவரி 27-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் மோடியின் தமிழகம் வருகை குறித்து விளக்கம் அளித்தார்.

ஜனவரி 27-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 27-ம்தேதி தமிழகம் வரவுள்ளார். இந்த தகவலை பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் வெளியிட்டிருக்கிறார்.

சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்திர ராஜன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

எங்களுக்கு இன்றைக்குதான் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 27-ம்தேதி தமிழகம் வருவார் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு யூகத்தின் அடிப்படையில் செய்திகள் பரவின.

இன்றுதான் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் பொதுச்செயலாளரிடம் இருந்து அதிகாரப்பூவர்மான தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 27-ம்தேதி பிரதமர் மோடி மதுரைக்கு வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை நாங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டோம். மோடி வரும் நிகழ்ச்சி எங்களுக்கு மாநாடாக அமையும். கட்சியின் பொதுக்கூட்டமாகவும் அமையும்.

மோடி யாரையெல்லாம் சந்திப்பார் என்பது முடிவு செய்யப்படவில்லை. மோடியின் வருகை தொண்டர்களுக்கு உற்சாகத்தை தரும். எங்களது முழு கவனமும் மோடியின் வருகை, நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றில்தான் உள்ளது.

நாளை பாஜகவின் உயர்மட்டக்குழு கூட்டம் கூடும். அதன் முடிவில் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிப்போம். கூட்டணி பற்றி எதுவும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திப்போம்.

இவ்வாறு தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

.