கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது.
Abu Dhabi: பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ''Order of Zayed'' (ஆர்டர் ஆஃப் சயீத்) விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய 3 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம், பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு சென்ற அவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 2 விமான விபத்துகளில் உயிரிழந்த இந்தியர்களின் நினைவாக பாரீசில் நிறுவப்பட்டு உள்ள நினைவுச் சின்னம் ஒன்றை திறந்து வைத்தார்.
அத்துடன் பிரான்சில் வாழும் இந்தியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்றார். பின்னர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் எடோவர்ட் பிலிப் ஆகியோருடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைதொடர்ந்து, நேற்று அமீரகத்திற்கு வந்த மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீதை மோடி சந்தித்து இருதரப்பு, பிராந்தியம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், வெளிநாடுகளில் பணமற்ற பரிவர்த்தனை (Cashless Transaction) செய்வதற்காக ரூபே கார்டு நெட்வொர்க்கை மோடி நிறுவினார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் சயீத்' விருதை அபுதாபி பட்டத்து இளவரசர் முகமதி பின் சயீத் வழங்கி கவுரவித்துள்ளார்.
அமீரக பயணத்தை தொடர்ந்து பஹ்ரைனுக்கு மோடி செல்கிறார். அங்கு அந்நாட்டின் மன்னர் ஷேக் ஹமாத் பின் இசாவை சந்தித்து மோடி பேசுவார். பஹ்ரைனில் ஸ்ரீநாத்ஜி கோயிலின் சீரமைப்பு பணிகளை மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
பஹ்ரைன் பயணத்தை முடித்துக் கொண்டு மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக மீண்டும் பிரான்சுக்கு செல்லவுள்ளார். மோடியின் பஹ்ரைன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்நாட்டிற்கு பயணம் செல்லும் முதல் இந்திய பிரதமராக மோடி உள்ளார். பஹ்ரைனில் இந்திய வம்சாவளியினர் கணிசமாக வாழ்கின்றனர். அவர்களை மோடி சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.