பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை சட்ட திருத்தத்தை பாராட்டியுள்ள பாஜகவின் துணைத் தலைவர் சிவராஜ் சிங் சவுகான், பாகிஸ்தானில் மத ரீதியில் துன்புறுத்தப்பட்டு அதிகளானவர்களுக்கு பிரதமர் மோடி கடவுளைப் போன்றவர் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக துணைத் தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
மதரீதியில் துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்கு வந்தவர்கள், இங்கிருந்து பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு செல்ல முடியாத அந்நாட்டவர்களுக்கெல்லாம் பிரதமர் மோடி கடவுளைப் போன்றவர். அவர்களுக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக மக்கள் மத்தியில் குழப்பத்தையும் அச்சத்தையும் காங்கிரஸ் கட்சி விதைக்கிறது. இந்தியாவில் வாழும் அகதிகளின் குரலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கேட்டிருக்கிறார்களா? இதற்கு பதிலாக பதிவு செய்யப்பட்ட வீடியோவை அவர்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சோனியா காந்தி குடியுரிமை சட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களில் பங்கெடுத்து பேச வேண்டும்.
இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் பேசினார்.