This Article is From Sep 12, 2019

Government's 100 Days: “இது வெறும் டிரெய்லர் தான்…”- 100 நாள் ஆட்சி பற்றி பிரதமர் மோடி!

மோடி 2.0 ஆட்சி, பல சட்டங்களை முதல் 100 நாட்களிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளன

Government's 100 Days: “இது வெறும் டிரெய்லர் தான்…”- 100 நாள் ஆட்சி பற்றி பிரதமர் மோடி!

இதே பாதையில் பாஜக பயணித்தால் நாம் பெரும் அழிவை எதிர்நோக்குவோம்- காங்கிரஸ் விமர்சனம்

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி அக்கட்சி சார்பில் பல்வேறு இடங்களிம் ‘சாதனை விளக்கக் கூட்டங்கள்' நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி, 100 நாட்கள் ஆட்சி நிறைவு பற்றி பேசுகையில், “இதுவரை இந்த ஆட்சியில் நீங்கள் பார்த்தது வெறும் டிரெய்லர்தான். இனிதான் பாக்கி படமும் உள்ளது” என்று பஞ்ச் கொடுத்து உரையாற்றியுள்ளார். 

“நாட்டை அனைத்து மட்டங்களிலும் முன்னேற்ற என் தலைமையிலான அரசு தொடர்ந்து பாடுபடும். நாட்டின் வளங்களைச் சுரண்டுபவர்களுக்கு எதிராகவும் தீவிரமாக செயலாற்றுவோம். வளர்ச்சிதான் எங்களின் முக்கிய குறிக்கோள். இப்படிப்பட்ட வேகத்தில் நாடு முன்னர் எப்போதும் வளர்ச்சி கண்டதில்லை. அதே நேரத்தில் ஊழலுக்கு எதிராகவும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யாரெல்லாம் பொது சொத்துக்களை களவாடுகிறார்களோ அவர்களுக்குத் தக்கப்பாடம் புகட்டப்படும்” என்று ராஞ்சி பொதுக் கூட்டத்தில் பேசினார் மோடி. 
 

மோடி 2.0 ஆட்சி, பல சட்டங்களை முதல் 100 நாட்களிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளன. முத்தலாக் சட்டம், ஆர்.டி.ஐ திருத்தச் சட்டம், ஜம்மூ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து சட்டம் உள்ளிட்ட முக்கிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றன. கடந்த பல ஆண்டுகளாக நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே மோடி தலைமையில் புதிய அரசு நடத்திய கூட்டத் தொடர்தான் மிகவும் ஆக்கபூர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது. 

முன்னதாக ஹரியானாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, “கடந்த 100 நாட்களில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாட்டின் 130 கோடி பேர்தான் காரணம். மத்தியில் ஆண்டாலும் சரி, மாநிலத்தில் ஆண்டாலும் சரி ஏழை மக்கள்தான் பாஜக-வின் முன்னுரிமையாக உள்ளது. நாட்டை முன்னேற்றுவதே எங்கள் நோக்கம்” என்று பேசினார். 

அதே நேரத்தில் பாஜக-வின் 100 நாள் ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சி, “பாஜக-வின் முதல் 100 நாட்கள் ஆட்சி என்பது துக்கம், குழப்பம், அதிகாரம் என்ற 3 வார்த்தைகளில் விளக்கலாம். நாட்டில் உள்ள 8 துறைகள், 2 சதவிகிதத்துக்கு குறைவாகவே வளர்ச்சி கண்டுள்ளன. ஆனால், அதை இன்னும் மத்திய நிதி அமைச்சர் ஒப்புக் கொள்ள மறுக்கிறார். இதே பாதையில் பாஜக பயணித்தால் நாம் பெரும் அழிவை எதிர்நோக்குவோம்” என்று விமர்சித்துள்ளது. 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், பொருதார நிலை குறித்து, “பொருளாதார வீழ்ச்சி தொடர்ந்து கொண்டிருப்பதை இந்தியாவால் பொறுத்துக் கொள்ள முடியாது. பழி வாங்கும் அரசியலை கைவிட்டுவிட்டு மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 


 

.