பாஜகவில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி பிரிந்த பின்பு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திரா செல்கிறார். ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதி நகர் உருவாக்க பணிகள் அடிக்கல் நாட்டு விழாவுக்காக பிரதமர் மோடி அங்கு செல்கிறார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த உள்ளதாக ஆந்திர முதல்வரும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இதேபோல் இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியினரும் பெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஆந்திராவில் இரு பெட்ரோலியம் மற்றும் வாயு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதேபோன்று நெல்லூரில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கடலோர முனையம் அமைப்பதற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டுகிறார். இதன்பின்னர் அவர் பாஜக பொது கூட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
பிரதமர் மோடியின் ஆந்திர வருகையை முன்னிட்டு, பாஜக தரப்பில் தொண்டர்கள் பேரணி நடத்தி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, பிரதமரின் ஆந்திர வருகைக்கு எதிராக பல்வேறு பகுதிகளிலும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக பாஜகவினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
இதேபோல், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திய வழியில் போராட்டம் நடத்த உள்ளதாக ஆந்திர முதல்வரும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவிற்கு அநீதி இழைத்த மோடி இங்கு வருவதில் எந்த நியாயமும் இல்லை. அவர் மாநிலங்கள் மற்றும் அரசியலமைப்பை பலவீனப்படுத்தி வருகிறார். இது ஆந்திராவிற்கு கறுப்பு தினம் என்றும் தனது கட்சி தொண்டர்கள் அனைவரும் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மஞ்சள் மற்றும் கறுப்பு நிறங்களில் உடை அணிந்து, பலூன்களை பறக்க விட்டு காந்திய வழியில் அமைதி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆந்திராவுக்கு தனி அந்தஸ்து தருவதாக கூறிய வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றாத காரணத்தினால் மோடி மீது சந்திபாபு கடும் கோபத்தில் இருந்த வருகிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக ஆந்திராவின் பல்வேறு இடங்களில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஊர்வலங்களை நடத்தி வருகின்றன.