This Article is From Dec 22, 2019

டெல்லி பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

இதையடுத்து 40 லட்சம் குடியிருப்புவாசிகளுக்கு பட்டம் வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. இதில் 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

டெல்லி பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

New Delhi:

டெல்லியில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை இன்று ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். 

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என்று போராட்டத்தில் குதித்துள்ளனர். தினந்தோறும்  வெவ்வேறு வடிவத்தில் போராட்டம் நடந்து வரும் நிலையில், பாஜகவின் இந்த மாபெரும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் ராம்லீலா மைதானத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ள தார்யாகான்ஜ் பகுதியிலே பெரும் வன்முறை நிகழ்ந்தது. 

டெல்லியில், 175 சதுர கி.மீ.,க்கும் அதிகமான பல்வேறு பகுதிகளில், அங்கீகாரம் இல்லா குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதில், மிக குறைந்த வருவாய் உள்ள, ஆயிரக் கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இதில் 1,797 குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு நில உரிமை ஆவணம் (பட்டா) வழங்க கோரி, அப்பகுதி மக்கள், நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இவர்களுக்கு பட்டா வழங்க மத்திய அரசு முடிவு செய்து மக்களவையில் கடந்த டிச.4ம் தேதி சட்டமும் இயற்றப்பட்டது. இதையடுத்து 40 லட்சம் குடியிருப்புவாசிகளுக்கு பட்டம் வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. இதில் 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக டெல்லியில் அபார வெற்றி பெற்றது. ஆளும்  ஆம். ஆத்மி கட்சி 5 தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போது டெல்லியில் அடுத்த பிப்வரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. 

டெல்லி சட்டமன்ற தேர்தல்களில், 55  சதவீத வாக்குகளை பெற தீவிர வியூகம் வகுக்கப்பட்டு வருவதாக பாஜக கூறியுள்ளது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை இன்று ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில், உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து, டெல்லி ராம்லீலா மைதானத்தை ஒட்டிய வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் போலீசார் ராம்லீலா மைதானத்தை சுற்றி வளைத்து காவல் பணி மேற்கொண்டுள்ளனர். 

தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், விமானத்தையும் ஆளில்லாத குட்டி விமானங்களையும் வீழ்த்தும் படைகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றும் நிகழ்ச்சிக்கு வரும் ஒவ்வொருவரும் அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்றும் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டமானது வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிம் அல்லாதவர்கள் இந்திய குடிமகனாக மாறுவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அசாமில் 1985-ல் ஏற்படுத்தப்பட்ட விதிகளை ரத்து செய்வதாகவும், சட்ட ரீதியாக அசாமுக்கு வருபவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்வதாக கூறி போராட்டம் நடைபெறுகிறது.

மற்ற இடங்களில் அரசியலமைப்பு சட்டத்திற்கு குடியுரிமை சட்ட திருத்தம் எதிரானது என்றும், மத அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் கூறி போராட்டங்கள் நடக்கின்றன. 

.