This Article is From Apr 09, 2019

கோவையை குறிவைக்கும் பாஜக; பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் மோடி… பரபரக்கும் அரசியல் களம்!

கோவையில் பாஜக சார்பில், அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

கோவையை குறிவைக்கும் பாஜக; பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் மோடி… பரபரக்கும் அரசியல் களம்!

இந்த பிரசாரக் கூட்டத்தில் அதிமுக-வின் முக்கிய நிர்வாகிகளும், பிரேமலதா விஜயகாந்த், ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இன்று மாலை 6 மணி அளவில் கோயம்புத்தூரில் இருக்கும் கொடீசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடக்கும் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி தமிழகத்தில் பங்கேற்கும் முதல் பொதுக் கூட்டம் இதுவாகும். இந்த காரணத்தினால், தமிழக அரசியல் களம் உற்றுநோக்கும் பிரசாரக் கூட்டமாக இது மாறியுள்ளது. 

இந்த பிரசாரக் கூட்டத்தில் அதிமுக-வின் முக்கிய நிர்வாகிகளும், பிரேமலதா விஜயகாந்த், ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைசூரிலிருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு வந்தடையும் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக கொடீசியா மைதானத்துக்கு வருவார். பிரசாரக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், மீண்டும் தனி விமானம் மூலம் டெல்லிக்கு அவர் புறப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவையில் பாஜக சார்பில், அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகவும், தூத்துக்குடி, சிவகங்கை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் தொகுதிகளில் களம் காணும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் இன்று மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

.