Read in English
This Article is From May 31, 2019

மோடியின் புதிய அமைச்சரவை இன்று மாலை சந்திக்கிறது; யாருக்கு எந்த துறை..?

பாஜக-வுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக-வுக்கும் எந்த அமைச்சர் பதவியும் தரப்படவில்லை

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டது. நேற்று பதவியேற்றுக் கொண்ட 57 அமைச்சர்களுக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்பது குறித்து இன்று இரவுக்குள் அறிவிக்கப்படும். இந்த முறை 25 புதிய எம்.பி-க்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். 

பாஜக-வின் வரலாற்று வெற்றிக்குக் காரணமாக இருந்த கட்சியின் தலைவர் அமித்ஷா, முக்கியமான துறைக்கு அமைச்சராவார் என்று கூறப்படுகிறது. அதேபோல ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோருக்கும் முக்கியமான துறைகள் ஒதுக்கப்படுன் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

மோடியின் முதல் ஆட்சிக் காலத்தில் நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் ஆகியோர், இந்த முறை தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். அவர்கள் இருவரது விலகல், மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது. 

Advertisement

தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை குறித்து பிரதமர் மோடி, “அனுபவமும் இளமையும் சேர்ந்த குழு” என்று வர்ணித்துள்ளார். 
 

புதிய அமைச்சரவை பதவியேற்றதைத் தொடர்ந்து இன்று மாலை 5:30 மணிக்கு முதல் முறையாக சந்திக்க உள்ளது. 

வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த ஜெய்ஷங்கருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது பலரால் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது. அதேபோல முன்னாள் அமைச்சர்களா ராஜ்யவர்தன் ரத்தோர், சுரேஷ் பிரபு, மேனகா காந்தி, ஜே.பி.நட்டா மற்றும் ஜெயந்த் சின்கா ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படாதது அதிர்ச்சியளித்தது. 

Advertisement

பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு, அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல். நிதிஷ் குமார் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம். ‘ஒரு இடத்துக்கு பதில் இரண்டு அமைச்சர் பதவி தாருங்கள்' என்று நிதிஷ், பாஜக தரப்பிடம் கேட்டுள்ளாராம். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வைத்து தலா 17 இடங்களில் போட்டியிட்டன. பாஜக, தான் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. ஐ.ஜ.த, 16 இடங்களைக் கைப்பற்றியது. 

தேர்தல் நடந்த 543 இடங்களில் பாஜக, 303-ஐக் கைப்பற்றியது. இதனால் தனிப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது பாஜக. அதே நேரத்தில் அடுத்தடுத்து பல மாநில சட்டமன்றத் தேர்தல்கள் வரவுள்ளதால் கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக, உரசல் போக்கைப் பின்பற்றாது என்று சொல்லப்படுகிறது. 

Advertisement

பாஜக-வுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக-வுக்கும் எந்த அமைச்சர் பதவியும் தரப்படவில்லை. அதிமுக-வில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் முரண் இருந்ததால், அமைச்சர் பதவி கைவிட்டுப் போனதாகத் தெரிகிறது. 

உத்தர பிரதேச கூட்டணிக் கட்சியான அப்னா தளத்துக்கும் இந்த முறை அமைச்சர் பதவியை வழங்கவில்லை பாஜக. அதே நேரத்தில் சிவசேனா மற்றும் அகாலி தளம் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியை வழங்கியுள்ளது பாஜக.
 

Advertisement