ஒட்டுமொத்த நாடும் கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் நேரத்தில், பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ஜனநாயகத்தை படுகொலை செய்கின்றனர் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், ராஜஸ்தானில் தனது ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது, இதுபோன்ற சமயத்தில், யார் வலியை தருகிறார்கள், யார் மருந்தை தருகிறார்கள் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
உலகமே வைரஸ் நெருக்கடியை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்த போதும், மத்திய பிரதேசத்தில் இருந்த காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துவதில் பாஜக மும்முரமாக இருந்தது. அதேபோல், தற்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து வருகிறது.
இதுதொடர்பாக ராஜஸ்தான் காங்கிரஸ் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதில், ஆட்சியை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், அதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களையும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் சுயேட்சை எம்எல்ஏக்களையும் தங்கள் பக்கம் இழுக்க குதிரை பேரம் நடந்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் இருந்து தற்போது வரை, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இரண்டு பெரும் மாநிலங்களில் காங்கிரஸ் தனது அதிகாரத்தை இழந்துள்ளது.
ராஜஸ்தானில் ஜூன் 19ம் தேதி மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக நடைபெற உள்ள தேர்தலால் உச்ச கட்ட அரசியல் பரபரப்பு எட்டியுள்ளது.
இதுதொடர்பாக துணை முதல்வரும், ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் கூறும்போது, கட்சிக்கு இரண்டு இடங்களை வெல்ல போதுமான எண்ணிக்கைகள் இருப்பதாகவும், யாரும் கட்சியை விட்டு வெளியேறவில்லை என்றும் கூறினார்.
காங்கிரஸ் கட்சி நெருக்கடியில் இருப்பதாக கூறப்படுவதற்கு அவர் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார். மாநிலங்களவை தேர்தலில் இரண்டு சீட்டுகளையும் வெல்வதற்கான பலம் எங்களிடம் உள்ளது. எங்களிடம் போதிய எம்எல்ஏக்கள் இல்லை என்று எந்தவித ஊகங்களும் இருக்கக்கூடாது. மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். அனைத்து எம்எல்ஏக்களும் எங்களுடன் தான் இருக்கின்றனர் என்று அவர் கூறினார்.
ராஜஸ்தானில் மூன்று மாநிலங்களவை இடத்திற்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இரண்டில் காங்கிரஸ் கட்சியும், ஒன்றில் பா.ஜனதாவும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பா.ஜனதா ஒருவருக்குப் பதிலாக இரண்டு பேரை களம் இறக்கியுள்ளது. ஒரு வேட்பாளர் வெற்றிபெற 51 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தேவை.
தற்போதைய சூழலில் காங்கிரசுக்கு பயமில்லையென்றாலும், காங்கிரசுக்கு அதரவளித்துக்கொண்டிருக்கும் 12 சுயேச்சை எம்.எல்.ஏக்களின் ஆரதவினை பாஜக பெற்றுவிட்டால் நிலைமை தலைகீழாக மாறிவிடும்.
காங்கிரசிடம் 107 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். இதில் ஆறு பேர் மாயாவதி கட்சியைச் சேர்ந்தவர்கள். கடந்த வருடம் இவர்கள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டனர். 12 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். பா.ஜனதாவுக்கு 72 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். மேலும் கூட்டணி கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் என 6 பேர் ஆதரவு கொடுத்துள்ளனர்.
பாஜக தனது மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவையில் பெரும்பான்மை முக்கியமானது. எனவே தனது பலத்தினை ராஜ்யசபாவில் பாஜக விரிவுபடுத்த முயல்கின்றது.