This Article is From Jul 08, 2018

காங்கிரஸ் ஒரு ஜாமின் வண்டியாகி உள்ளது!- சசி தரூர் ஜாமினை விமர்சித்த பிரதமர் மோடி

இந்த ஆண்டு ராஜஸ்தான் மாநில பொதுத்தேர்தல் நடைபெறுவதை அடுத்து பாஜக-வின் தேர்தல் பிரச்சாரத்தை முதல் ஆளாகத் தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் மோடி

ஹைலைட்ஸ்

  • ஜெய்ப்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் இது குறித்து பேசியுள்ளார் மோடி
  • சசி தரூருக்கு இன்று ஜாமின் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
  • காங்கிரஸும் மோடியின் கூற்றுக்கு பதில் அளித்துள்ளது
Jaipur:

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு மாநில பொதுத்தேர்தல் நடைபெறுவதை அடுத்து பாஜக-வின் தேர்தல் பிரச்சாரத்தை முதல் ஆளாகத் தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் மோடி.

இன்றைய பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர்கள் பலர் ஜாமினில் வெளியே இருப்பதால் அக்கட்சியை ’ஜாமின் வண்டி’ எனப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சசி தரூருக்கு அவரது மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் ஜாமின் வழங்கப்பட்டது. இதைத் தாக்கும் வகையிலேயே பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தான் பொதுத் தேர்தலுக்கு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி இன்று தனது பிரசாரத்தை ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் நகரில் நடத்தினார். அப்போது பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரபலங்களும் மூத்தத் தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களும் இன்றைய சூழலில் ஜாமினில் தான் வெளியில் உள்ளனர்” எனக் குறிப்பிட்டார். மேலும் பாஜக குறித்துப் பேசுகையில், “ஊழல் மீது எந்த ஒரு சமரசமும் எங்களுக்குக் கிடையாது. எங்களுடைய முழு முயற்சியும் புதிய இந்தியாவை வடிவமைப்பது தான்” எனக் கூற்னார்.

pm modi jaipur rally twitter

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சசி தரூர் இன்று தனது மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் ஜாமின் பெற்றுள்ளார். இவர் மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி மற்றும் இந்நாள் தலைவரான ராகுல் காந்தி ஆகியோரும் கூட தேசிய ஹெரால்டு முறைகேடு வழக்கில் ஜாமினில் தான் உள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளை டிராக்டரில் இருந்து மாட்டு வண்டிக்கு என கீழ் இறக்கிய பாஜக அரசின் ஆட்சி ஊழலையே காட்டுகிறது. பாஜக அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து பார்த்தால் விசாரணையே தேவைப்படாது. நாங்கள் ஆட்சிக்கு வரும்போது அந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் விசாரிக்கப்படும். அப்போது பாஜக-வினர் எல்லாம் பெயிலில் இருக்கமாட்டார்கள், ஜெயிலில் இருப்பார்கள்” எனக் கூறப்பட்டுள்ளது.

.