இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வரவுள்ள நிலையில், பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பதிவில், ”உங்கள் வருகைக்காக இந்தியாவே காத்திருக்கிறது. விரைவில் உங்களை அகமதாபாத்தில் சந்திக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். நேற்று அமெரிக்காவிலிருந்து இந்தியா புறப்பட்டதாக டிரம்ப் தனது ட்வீட்டரில் தெரிவித்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி அந்த ட்வீட்டிற்கு பதிலளித்துள்ளார்.
குஜராத்தில் மாபெரும் நகரமான அகமதாபாத்திற்கு டிரம்ப் வந்திறங்குகிறார். இதைத்தொடர்ந்து, டிரம்ப் வருகையால் இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு மேலும் வலுப்பெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி விமான நிலையத்துக்கு நேரில் வந்து டிரம்ப் தம்பதியருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறார். விமான நிலைய வரவேற்பு முடிந்ததும், பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் ‘நமஸ்தே டிரம்ப்' என்னும் சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த பயணத்தின்போது இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ரீதியாகப் பிரமாண்ட ஒப்பந்தம் ஏற்படும் என்று கூறப்பட்டு வந்த தகவலை, சில தினங்களுக்கு முன் டிரம்ப் திடீரென மறுத்தார். மேலும், அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா கடுமையான வரி விதிப்பதாகக் குற்றம்சாட்டினார். இதனால், சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர், இரு தினங்களுக்கு முன் வாஷிங்டனில் பேட்டியளித்த அவர், ‘இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும்,' எனத் தெரிவித்தார். இதனால், டிரம்ப்பின் இந்தியப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, மத சுதந்திரம் தொடர்பாகப் பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என அதிபர் அலுவலக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியம் மற்றும் அமைப்புகளின் மீது அமெரிக்க பெரும் மரியாதை வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.