This Article is From Oct 22, 2018

சிபிஐ இயக்குனர், துணை இயக்குனருக்கு சம்மன் - அதிகார போரை முடிவுக்கு கொண்டுவர மோடி நடவடிக்கை

சிபிஐ-யின் சிறப்பு இயக்குனராக இருக்கும் ராகேஷ் அஸ்தனாவுக்கு எதிராக லஞ்சப் புகாரை சிபிஐ பதிவு செய்துள்ளது.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் துணை இயக்குனர் ராகேஷ் அஸ்தனாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளார் பிரதமர் மோடி.

New Delhi:

சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குனராக அலோக் வர்மா உள்ளார். இதன் துணை அல்லது சிறப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தனா பணியாற்றி வருகிறார். நாட்டின் மிக முக்கிய துறையான சிபிஐ-யில், இந்த இரு உயர் அதிகாரிகளுக்கும் இடையே அதிகார யுத்தம் இருப்பதாக தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. 

இதற்கிடையே, தனது மூத்த அதிகாரியான சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி துணை இயக்குனர் ராகேஷ் அஸ்தனா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இதேபோன்று லஞ்சம் வாங்கியதாக ராகேஷ் அஸ்தனா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்ததில் பண மோசடி செய்ததாக ஐதராபாத்தை சேர்ந்த வர்த்தகர் மொய்ன் குரேஷி மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை சிபிஐ-தான் விசாரித்தது.

இந்த வழக்கில் இருந்து மொய்ன் குரேஷியை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ. 5 கோடி தர வேண்டும் என்று அஸ்தனா தரப்பில் கேட்டதாக சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில், துணை இயக்குனராக அஸ்தனாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தபோது, அதற்கான அனுமதியை பிரதமர் அலுவலகத்திடம் சிபிஐ கேட்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அஸ்தனாவுக்கு கீழ் பணியாற்றிய அதிகாரி தேவேந்திர குமார் என்பவரை சிபிஐ இன்று கைது செய்துள்ளது.

இந்த விவகாரத்தை கையில் எடுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் பழி வாங்குதலுக்காக சிபிஐ அமைப்பை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.

இத்தகைய சூழலில்தான் நேரில் தன்னை சந்திக்குமாறு சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் துணை இயக்குனர் ராகேஷ் அஸ்தனா ஆகியோருக்கு பிரதமர் மோடி சம்மன் அனுப்பி உள்ளார். 

.