ஜம்மூ காஷ்மீர் அனாந்தாங் மாவட்டத்தில் இந்த வார ஆரம்பத்தில் இன்ஸ்பெக்டர் அர்ஷத் கான், தீவிரவாத தாக்குதலால் கொல்லப்பட்டார். இதையடுத்து அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்த இறுதிச் சடங்கின் போது அர்ஷத் கானின் 4 வயது குழந்தையும் உடனிருந்தது. அப்போது அங்கிருந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், அந்த குழந்தையை அழுதுக் கொண்டே தூக்கிச் சென்றார். இந்த சம்பவம் குறித்த ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி, பார்ப்பவர்களை நெகிழ வைத்துக் கொண்டிருக்கிறது.
அர்ஷத் கானின் 4 வயது குழந்தை உஹ்பானை, தூக்கிச் சென்றது எஸ்.பி., ஹசீப் முகல் என்பது தெரியவந்துள்ளது.
அர்ஷத் கானின் மகன் எஸ்.பி முகல் உடன் இருக்கும் படம்.
அனாந்தாங் மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் குழு மீது கடந்த புதன் கிழமை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் 5 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். அர்ஷத் கானுக்கு இந்த தாக்குதல் போது பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஞாயிற்றுக் கிழமை, டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
சி.ஆர்.பி.எப் குழு மீது தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகளில் ஒருவரை பாதுகாப்புப் படையினர் கொன்றுவிட்டனர்.
அர்ஷத் கான், ஸ்ரீநகரைச் சேர்ந்தவர். அவர் 2002 ஆம் ஆண்டு மாநிலத்தின் போலீஸாக தேர்வு செய்யப்பட்டார். கடைசியாக அவர் சதார் காவல் நிலையத்தில் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரியாக இருந்தார்.