கொரோனா வைரஸ் பரவலை மட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய அளவில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. முன்னதாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இருந்த ஊரடங்க உத்தரவை, மத்திய அரசு, மே 3 வரை நீட்டித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் நாட்டில் உள்ள பெரும்பான்மையான நகரங்கள் கடும் கட்டுப்பாடுகளுக்குக் கீழ்தான் உள்ளன.
இப்படிப்பட்ட சூழலில் மகாராஷ்டிர மாநிலம், தானேவில் சிலர், காலையில் வாக்கிங் செல்ல வெளியே வந்துள்ளனர். ஊரடங்கைப் பொருட்படுத்தாமல் வெளியே வந்த அவர்களை வெட்கி தலைக் குனிய வைக்கும் நோக்கில், அந்நகர போலீஸ் வித்தியாசமான முயற்சியைக் கையிலெடுத்தார்கள்.
போலீஸ், ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்தவர்களை வட்டமாக நிறுத்தி வைத்து, அவர்களுக்கு ஆரத்தி எடுத்துள்ளனர். மேலும் அவர்களின் செயலைப் ‘பாராட்டும்' வகையில் கைதட்டியும் ஆரவாரம் செய்துள்ளது போலீஸ் குழு.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ட்விட்டர் தளத்தில் வைரலாகியுள்ளது. வீடியோ பகிரப்பட்டதிலிருந்து பல்லாயிரம் வியூஸ்களை குவித்துள்ளன. பலரும் காவல் துறையின் இந்த வித்தியாச முயற்சியைப் பாராட்டி வருகிறார்கள்.