ஜம்மு காஷ்மீரில் அமலில் இருக்கும் 35 ஏ சட்டவிதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில், 35 ஏ சட்டப்பிரிவை நீதிமன்றம் ரத்து செய்தால், ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் கிளர்ச்சி ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக, தகவல் கிடைத்துள்ளது.
இந்த சட்ட பிரிவு, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் அல்லாதோர், அங்கு நிலமோ அல்லது வீடோ வாங்க முடியாது என்கிறது. வலதுசாரி அமைப்புகளின் ஆதரவது கொண்ட தொண்டு அமைப்பு ஒன்று இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.
அந்த வழக்கில் “அரசியல் சட்டம் என்பது பாராளுமன்றத்தால் மட்டுமே கொண்டு வர முடியும். ஆனால் 35ஏ, குடியரசு தலைவரால் கொண்டு வரப்பட்டது. அரசியல் அமைப்பில் இருக்கும் விதிகளை மீறி இந்த சட்ட கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்” கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டால் ஜம்மு காஷ்மீரில் தொழிற் சங்கங்கள், தொழில் கூட்டமைப்புகள், வழக்கறிஞ்சர் சங்கம், மக்கள் சங்கங்கள் போன்ற அமைப்புகள் போராட்டத்தில் இறங்குவதாக எச்சரித்துள்ளனர். உயர் பதவியில் இருக்கும் காவல் துறையினர் மூலம் கிளர்ச்சி எழும் என்றும் உளவு அமைப்புகள் அரசை எச்சரித்துள்ளன.
இந்த விஷயத்தில் இருக்கும் ஆபத்தை உணர்ந்த மாநில அரசு, ஆளுநர் என்.என்.வோரா தலைமையில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. அதில் வழக்கின் தீர்ப்பை பஞ்சாயத்து மற்றும் உள் ஆட்சித் தேர்தல்கள் முடிந்த பின், அக்டோபர் மாதம் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய டி.ஜி.பி ஷேஷ் பால் வாடியா “ அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கும் என நம்புகிறேன். நானும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவன் தான். எனக்கும் ஒரு கருத்து உள்ளது. ஆனால், நான் எனது பணியை தான் முதலில் செய்வேன்”, என கிளர்ச்சி எழும் என்ற தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் பறிக்கப்படுவதற்கு எதிராக பிரிவினைவாதிகளும், முக்கிய அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் முறை ஜம்மு காஷ்மீரில் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளித்துள்ளது. அமைதியான முறையில் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்று நம்புவதாக காவல் துறை கூறியுள்ளது.