This Article is From Apr 07, 2019

அரசியல் கட்சிகள் விளம்பரம் வெளியிட தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் நேரத்தில் மக்களை தவறாக வழி நடத்தும் வகையில் தேர்தல் நாளிலும், அதற்கு முந்தைய நாளிலும் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதாக புகார் எழுந்தது.

அரசியல் கட்சிகள் விளம்பரம் வெளியிட தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

இது அனைத்து கட்ட தேர்தலுக்கும் பொருந்தும் - தேர்தல் ஆணையம்

தேர்தல் நாளிலும், அதற்கு முந்தைய நாளிலும் முன் அனுமதியில்லாமல் பத்திரிகைகளில் அரசியல் விளம்பரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.11ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரசாரங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அதோடு பத்திரிகை மற்றும் மீடியாக்களில் விளம்பரங்கள் வெளியிட்டும் ஆதரவை கோரி வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் நேரத்தில் மக்களை தவறாக வழி நடத்தும் வகையில் தேர்தல் நாளிலும், அதற்கு முந்தைய நாளிலும் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதாக புகார் எழுந்தது.

அவதூறு மற்றும் வெறுப்புணர்வை பரப்பும் விளம்பரங்களால் அசம்பாவிதம் நிகழக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்கள பயன்படுத்தி, தேர்தல் நாளிலோ அல்லது அதற்கு முந்தைய நாளிலோ தேர்தல் ஆணையத்தால் முன்கூட்டியே தணிக்கை செய்யப்படாத விளம்பரங்களை வெளியிடுவதற்கு பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இது அனைத்து கட்ட தேர்தலுக்கும் பொருந்தும் எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. தேர்தலின் போது தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு ஊடகங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டிருந்த நலையில், தற்போது பத்திரிகைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

.