This Article is From Jan 05, 2019

‘இப்படி கலக்குறீங்களே மம்தா!’- வங்க முதல்வரின் மறுபக்கம் #ViralVideo

அடுத்தடுத்த பல அதிரடி அரசியல் மூவுக்காக அவரும் அவரது கட்சியான திரிணாமூல் காங்கிரஸும் தயாராகி வருகின்றன.

திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் வரும் 19 ஆம் தேதி, கொல்கத்தாவில் பிரமாண்டப் பேரணி நடத்தப்பட உள்ளது

Kolkata:

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி, அரசியல் களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக செயலாற்றக் கூடியவர். அடுத்தடுத்த பல அதிரடி அரசியல் மூவுக்காக அவரும் அவரது கட்சியான திரிணாமூல் காங்கிரஸும் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் மேற்கு வங்க, பிர்பும் மாவட்டத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கட்சி சகாக்களுடன் பாட்மிண்டன் விளையாடியுள்ளார் மம்தா. அவர் விளையாடியதை ஒரு கட்சி நிர்வாகி வீடியோவாக எடுத்து, தனது வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. 

மேற்கு வங்கத்தில் காலூன்ற பாஜக கடுமையாக முயற்சி செய்து வருகிறது. மாநிலத்தின் அனைத்து இடங்களுக்கும் பயணிக்கும் வகையில் பாஜக, ரத யாத்திரை ஒன்றுக்கு திட்டமிட்டது. இதற்கு மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து பாஜக நீதிமன்றத்தில் முறையிட்டது. இன்னும் வழக்கு விசாரணை முடியாததால், ரத யாத்திரை தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

இருந்தும் மனம் தளராத பாஜக, நரேந்திர மோடி தலைமையிலான இரண்டு பேரணிகளை மாநிலத்தில் வரும் நாட்களில் நடத்த உள்ளது. இப்படி மத்தியில் ஆளுங்கட்சி, திரிணாமூல் காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுத்து வருவதால், மம்தாவும் பிரமாண்ட பொதுக் கூட்டங்களை நடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். 

குறிப்பாக, ‘2019 மம்தாதான் எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர்' என்று அவரது கட்சியால் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் அறிந்தேதான் மம்தா, தேசிய அரசியலுக்கான காய்களை நகர்த்தி வருகிறார். திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் வரும் 19 ஆம் தேதி, கொல்கத்தாவில் பிரமாண்டப் பேரணி நடத்தப்பட உள்ளது. இதில் தேசிய அளவில் இருக்கும் பிரதான எதிர்கட்சிகள் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக் கூட்டத்தில் எப்படியும் சில முக்கிய அறிவிப்புகளை மம்தா வெளியிடுவார் என்று நம்பலாம்.
 


 

.