This Article is From Mar 12, 2019

பொள்ளாச்சி கொடூரம்: திட்டமிட்டப்படி திமுக போராட்டம் நடக்கும்! - கனிமொழி

திமுக சார்பில் பொள்ளாச்சி விவகாரம் குறித்து போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கொடுக்காவிட்டாலும் திமுக திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி கொடூரம்: திட்டமிட்டப்படி திமுக போராட்டம் நடக்கும்! - கனிமொழி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. இந்த சம்பவங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக கோவையில் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட எந்த பெண்ணும் புகார் தெரிவிக்க முன்வராததால் இவர்களின் அட்டகாசம் நீடித்து வந்துள்ளது. 

இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மாணவிகளை பாலியல் துன்புறுத்தும் சில வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. நெஞ்சை உலுக்கும் படுபயங்கரமான சம்பவத்தின் அந்த வீடியோ காட்சிகள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி.கனிமொழி, இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டார் என்பது முக்கியமல்ல, இத்தனை பெண்கள் பாதிப்படைய கூடிய அளவிற்கு ஒரு பெரும் கும்பல் இதன் பின்னால் செயல்பட்டுள்ளது. இதில் ஆளும் கட்சிக்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் தான் நாகராஜ் என்பவரை கட்சியில் இருந்து அதிமுக நீக்கியுள்ளது. 

இதற்கு பிறகும் அதில் இருப்பவர்கள் அரசியல் புள்ளிகள் ஈடுபட்டுள்ளனர் என்று கூறிய பின்னரும் குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரித்து என்ன நடந்தது என்பதை கூற காவல்துறை தயாராக இல்லை. எந்த அளவுக்கு காலதாமதம் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு அவர்கள் தாமதப்படுத்தி வருகின்றனர். 

இந்த விவகாரம் தொடர்பாக, திமுக சார்பில் குறித்து போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கொடுக்காவிட்டாலும் திமுக திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

.