This Article is From Mar 12, 2019

‘அவன் தப்பு பண்ணிருக்கமாட்டான்..!’- ஆவேசப்பட்ட திருநாவுக்கரசின் தாய்

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசுக்கு அவரது தாயார் லதா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்

‘அவன் தப்பு பண்ணிருக்கமாட்டான்..!’- ஆவேசப்பட்ட திருநாவுக்கரசின் தாய்

மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீனை தள்ளுபடி செய்தது.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, அது குறித்து வீடியோ வெளியிட்டு வந்த கும்பல் குறித்தான தகவல்கள் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அடுத்தடுத்து வரும் செய்திகள் நெஞ்சைப் பதறவைத்து வருகின்றன. இந்நிலையில் இந்த சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, 25 வயதாகும் திருநாவுக்கரசிற்கு ஜாமீன் கோரி, அவரது குடும்பம் சார்பில் இன்று பொள்ளாச்சி முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து நீதிமன்ற வளாகத்திலேயே அவரின் தாயார் ஆவேசமடைந்து பேசியுள்ளார். 

நீதிமன்ற வளாகத்தில் இருந்த பொது மக்கள் மத்தியில் கதறி அழ ஆரம்பித்த திருநாவுக்கரசின் தாய், ‘என் மகன் எந்த தப்பும் செய்யல. அவன் எதுவும் செய்திருக்க மாட்டான். அவன வேணும்னு இப்படி மாட்ட வச்சிட்டாங்க. அவன இப்ப துன்புறுத்துறாங்க' என்று தலையில் அடித்துக் கொண்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. இந்த சம்பவங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக கோவையில் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட எந்த பெண்ணும் புகார் தெரிவிக்க முன்வராததால் இவர்களின் அட்டகாசம் நீடித்து வந்துள்ளது.

இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மாணவிகளை பாலியல் துன்புறுத்தும் சில வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. நெஞ்சை உலுக்கும் படுபயங்கரமான சம்பவத்தின் அந்த வீடியோ காட்சிகள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கடந்த 25ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை இவர்கள் 4 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசுக்கு அவரது தாயார் லதா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீனை தள்ளுபடி செய்தது.


மேலும் படிக்கபொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு: சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு!

.