This Article is From Mar 11, 2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்: அதிமுகவில் இருந்து நாகராஜ் நீக்கம்!

அதிமுக கட்சியின் கொள்கைக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் ஏ.நாகராஜ் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்: அதிமுகவில் இருந்து நாகராஜ் நீக்கம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். இந்த இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்களை வீடியோவும் எடுத்து உள்ளனர்.

இதில் சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில், போலீசில் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை தாக்கியதாக அதிமுக கட்சியே சேர்ந்த நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவ்விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற தமிழக அரசு முயன்று வருவதாக இன்று குறிப்பிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், அதிமுக கட்சியின் கொள்கைக்கும் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் ஏ.நாகராஜ் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை அதிமுக பாதுகாக்கவில்லை, அவர்களை தண்டிக்கவே விரும்புகிறது எனவும் தெரிவித்தார்.

இதேபோல், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

.