This Article is From Mar 14, 2019

பொள்ளாச்சி விவகாரம்: பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்! - சிபிசிஐடி உதவி எண் அறிவிப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி விவகாரம்: பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்! - சிபிசிஐடி உதவி எண் அறிவிப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. இந்த சம்பவங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக கோவையில் தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கும்பலால் 60க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பாதிக்கப்பட்ட எந்த பெண்ணும் புகார் தெரிவிக்க முன்வராததால் இவர்களின் அட்டகாசம் நீடித்து வந்துள்ளது.

இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மாணவிகளை பாலியல் துன்புறுத்தும் சில வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. நெஞ்சை உலுக்கும் படுபயங்கரமான சம்பவத்தின் அந்த வீடியோ காட்சிகள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில், கடந்த செவ்வாயன்று இந்த பாலியல் கொடூர வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே வழக்கை சிபிஐக்கு பரிந்துரை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரண்டு நாட்களாக திருச்சி, கோவை, திருவண்ணாமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இன்று காலை பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிபிடிஐடி போலீசாரும் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். நேற்று இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு வீட்டில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாலியல் வன்கொடுமை விவாகரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி போலீஸ் உதவி எண் அறிவித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் படங்கள் வீடியோக்கள் தொடர்பாக 9488442993 என்ற எண்ணுக்கும், cbcidcbecity@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அளிப்பவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கில் எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேரிட்டவை மற்றும் தெரிந்த தகவல்களை தெரிவிக்கலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

.