This Article is From Aug 05, 2019

வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு தொடக்கம்: பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 9ந்தேதி நடக்கிறது.

வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு தொடக்கம்:  பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!

வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. பண பட்டுவாடா புகார் எதிரொலியாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் நடந்த 39 தொகுதிகளில், தேனி தொகுதியை தவிர மற்ற 37 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து வேட்பு மனுத்தாக்கல் 11ம் தேதி  தொடங்கி கடந்த 18ம் தேதி முடிவடைந்தது. இதில் திமுக சார்பில் கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஏ.சி.சண்முகத்துக்கும், கதிர் ஆனந்துக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து, வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,553 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1,919 கட்டுப்பாட்டுக் கருவி, 3,853 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 2 ஆயிரத்து 99 வி.வி.பேட் இயந்திரங்கள் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. 

வாக்குப்பதிவையொட்டி 3 ஆயிரத்து 957 போலீசார், 20 கம்பெனி சேர்ந்த 1,600 துணை ராணுவத்தினர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 400 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மொத்தமுள்ள 1,553 வாக்குச்சாவடி மையங்களில் 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே,  இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. 

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை நடைபெறும்.  வாக்கு எண்ணிக்கை 9ந்தேதி நடக்கிறது.

வேலூர் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 1,351 பேர் ஆண்கள், 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பேர் பெண்கள், 105 பேர் மூன்றாம் பாலினத்தினர்.  இவர்கள் ஓட்டுப்போடுவதற்காக 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளன.

.