This Article is From Jan 02, 2020

’கோலம் போட்டால் குடும்பம் குளோஸ்’: எச்சரிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்!

தமிழக மக்கள் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும், திமுகவினர் கோலம் போடக் கூறுவதாக, யாரேனும் கோலம் போட்டால், அவர்களது குடும்பம் குளோஸ். குண்டு வைத்துவிட்டு போய்விடுவான். 

’கோலம் போட்டால் குடும்பம் குளோஸ்’: எச்சரிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்!

கோலம் போடுவதாக கூறி அலங்கோலமாக மாறிவிடாதீர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்

திமுகவினர் கூறுவதைக் கேட்டு யாரேனும் கோலம் போட்டால், அவர்களது குடும்பம் குளோஸ் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். 

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று திருநெல்வேயில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழறிஞர் நெல்லை கண்ணனின் உரை ஒன்று சமூகவலைதளங்களில்
வைரலாக பரவியது. 

அதில், நெல்லை கண்ணன் இரு சமூகங்களுக்கிடையில் வன்முறையைத் தூண்டுவது போல் பேசியதாக அவர் மீது பல மாவட்டங்களில் பாஜகவினர் அளித்த புகார்களை தொடர்ந்து காவல்துறையினர் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர். 

தொடர்ந்து, நெல்லை கண்ணனை கைதுசெய்ய வலியுறுத்தி நேற்றைய தினம் சென்னை மெரினா கடற்கரையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,
சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, பாஜக தந்த தொடர் அழுத்தம் காரணமாக, நேற்றிரவு பெரம்பலூரில் வைத்து நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்து, நெல்லை அழைத்து வந்தனர். தொடர்ந்து நெல்லை, முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நெல்லை கண்ணன் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி நெல்லை கண்ணனை ஜனவரி 13-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, தமிழக மக்கள் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும், திமுகவினர் கோலம் போடக் கூறுவதாக, யாரேனும் கோலம் போட்டால், அவர்களது குடும்பம் குளோஸ். குண்டு வைத்துவிட்டு போய்விடுவான். 

நாங்கள் இழந்தவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்த கட்சியை சேர்ந்தவர்கள் நாங்கள். அந்த இழப்பு உங்கள் குடும்பங்களுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக நான் கூறுகிறேன். கோலம் போடுவதாக கூறி அலங்கோலமாக மாறிவிடாதீர்கள் என்று அவர் எச்சரித்துள்ளார். 

.