சிரோ-மலபார் சர்ச் பாதிரியார் ராபின் வடக்கும்பேரி தற்போது 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகச் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
சிறார்களை பாலியல் ரீதியாகச் சுரண்டும் குருமார்கள் மீது "பூஜ்ஜிய சகிப்புத்தன்மை" என்ற கொள்கையைக் கடைப்பிடித்து, போப் பிரான்சிஸ் பாலியல் பலாத்காரத்திற்குத் தண்டனை பெற்ற கேரள பாதிரியாரை அனைத்து பாதிரியார் கடமைகள் மற்றும் உரிமைகளிலிருந்து வெளியேற்றியுள்ளார் என்று தேவாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"ஆசாரிய கடமைகள் மற்றும் உரிமைகளைப் பயன்படுத்துவதில் இருந்து வடக்கும்பேரி விடுவிக்கப்பட்டார், அதாவது அவர் ஒரு சாதாரண மனிதராகக் குறைக்கப்பட்டார்" என்று தேவாலயம் அதிகாரி ஒருவர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
2017-ம் ஆண்டின் முற்பகுதியில் அவர் செய்த குற்றம் குறித்த செய்தி வெளியான உடனேயே அவர் பாதிரியார் கடமைகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு தலசேரியில் உள்ள ஒரு போக்ஸோ நீதிமன்றம் பாதிரியார் வடக்கும்பேரிக்கு 20 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை மற்றும் ரூ. மூன்று லட்சம் அபராதம் விதித்தது.
50 வயதான இந்த பாதிரியார் கண்ணூர் மாவட்டம் கோட்டியூரில் உள்ள உள்ளூர் தேவாலயத்தின் புரோகிதராகவும், பாதிக்கப்பட்ட சிறுமி படிக்கும் பள்ளியில் மேலாளராகவும் இருந்தார்.
அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
குழந்தைகளை பாலியல் ரீதியாகச் சுரண்டும் மதகுருக்களுக்கு "பூஜ்ய சகிப்புத்தன்மை" என்ற கொள்கையை அனைத்து ஆயர்களும் பின்பற்ற வேண்டும் என்று போப் பிரான்சிஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தெளிவுபடுத்தியிருந்தார். இந்த நிலையில் வாட்டிகனிலிருந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.